காஸ்ட்ரோ மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாதவர்- கம்யூனிஸ்ட் தலைவர்கள் அஞ்சலி #FidelCastro
காஸ்ட்ரோ மண்ணை விட்டு மறைந்தாலும் புரட்சியாளர்களின் மனதை விட்டு மறையாதவர் என்று கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்களும், தமிழக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் நண்பர் காஸ்ட்ரோ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். காஸ்ட்ரோ அனைத்து புரட்சியாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் என்று கூறியுள்ளார். மரணத்தை வென்ற மாவீரன் அவர் இன்று அவர் மரணத்திருக்கலாம். ஆனால் புரட்சியாளர்களின் நெஞ்சங்களில் இருந்து அவர் மரணமடையவில்லை அவருக்கு எனது வீர வணக்கம் என்று கூறினார்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பிடல் காஸ்ட்ரோவிற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளார். காஸ்ட்ரோ ஒரு மாபெரும் போராளி மட்டுமல்ல மிகச்சிறந்த ஆட்சியாளர், மக்களின் மனம் கவர்ந்த புரட்சி நாயகன் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஜி. ராமகிருஷ்ணன். உடல் நலம் குன்றிய உடன் பதவியை விட்டு விலகி, ஆட்சியாளருக்கு ஆலோசனை வழங்கினார். இன்றைய ஆட்சியாளர்களுக்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஜி. ராமகிருஷ்ணன்.
காஸ்ட்ரோ சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், போராளி மட்டுமல்ல, சிறந்த ஆட்சியாளர். மிகப்பெரிய தலைவர். அவரது மறைவு கியூபா நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இழப்புதான், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிடல் காஸ்ட்ரோ மிகச்சிறந்த போராளி மட்டுமல்ல மனித நேயம் கொண்ட நல்ல தலைவர். மக்களின் மனங்களை புரிந்து செயல்படுபவர் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த நண்பராக இறுதி வரை இருந்தவர். அவரது மறைவுக்கு கியூபாவுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும்தான் இழப்பு என்று நல்லக்கண்ணு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications