அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை... : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆட்சியாளர்கள், மேல் அதிகாரிகளுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சியினர் தயாராகி வரும் நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 234 தொகுதி மக்களையும் சந்திக்கும் வகையில் நமக்கு நாமே விடியல்மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக செப்டம்பர் 20 குமரியில் பயணம் தொடங்கிய ஸ்டாலின், 11 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அக்டோபர் 2ல் திருச்சியில் முதல் கட்டப் பயணத்தை நிறைவு செய்தார்.
2.75 லட்சம் மனுக்கள்
2.75 லட்சம் மனுக்கள் ஸ்டாலின் தனது இரண்டாவது கட்ட பயணத்தை அக்டோபர் 7ல் நீலகிரியில் தொடங்கி அக்டோபர் 18ம் தேதி கடலூரில் தனது இரண்டாவது கட்டப் பயணத்தை நிறைவு செய்தார். இந்த இரு பயணங்களில் மட்டும் 2.75 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் மூன்றாம் கட்டம்
மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் இன்று 3ம் கட்ட நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை தொடங்கினார். கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை திடல் அருகே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவர் வந்திருப்பதை அறிந்ததும் திரளான பொதுமக்கள் மற்றும் நெசவு தொழிலாளர்கள், விசைத் தறிதொழிலாளர்கள் அங்கு வந்து அவரிடம் மனு கொடுத்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு 3ம் கட்ட பயணத்தை சேலத்தில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.
வீரபாண்டி ஆறுமுகம்
வீரபாண்டி என்றதும் அண்ணன் வீரபாண்டியார் நினைவு தான் எனக்கு வருகிறது. இன்று அவர் நம்மிடம் இல்லை என்றாலும், சேலம் மாவட்டத்திற்கு அவர் செய்த திட்டங்கள், சாதனைகள் காணமுடிகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் இடத்தில் தேவையான திட்டங்களை பெற்று தந்தவர் வீரபாண்டியார். சேலம் சூப்பர் பெஷாலிட்டி மருத்துவமனை வருவதற்கு காரணமாக இருந்தவர் அண்ணன் வீரபாண்டியார். 162 ஏக்கர் தகவல் தொழில் நுட்ப பூங்கா சேலம் மாவட்டத்திற்கு வர, தலைவரிடம் வாதாடி, போராடி பெற்று தந்தார்.
மின்கட்டண உயர்வு
ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டமும் கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சிதான். ஆனால் இந்த திட்டத்தை முடக்கி, தற்போது 10 அல்லது 11 நாளைக்கு குடிநீர் வருகிறது. நெசவாளர்கள் நிறைந்த பகுதி சேலம் மாவட்டம். நெசவாளர்களுக்கு, விசைத்தறி நெசவாளர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் மின்சாரம் தந்தோம்.
இப்போது டிஜிட்டல் மீட்டர் பொருத்தி மின்கட்டணத்தை உயர்த்தி விட்டனர். இது தவிர மின் வெட்டும் உள்ளது. இதனால் விசைத் தறிநெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விசைத்தறி நெசவாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை
இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆட்சியாளர்கள், மேல் அதிகாரிகளுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவற்றை எல்லாம் பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
முற்றுப்புள்ளி
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதியதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தை இழுத்து பூட்டினார்கள். நான்கரை ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வந்த பல்வேறு சாதனை திட்டங்களை முடக்கி விட்டனர். இது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை. இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி உருவாக அனைவரும் ஒன்று படவேண்டும் என்றார்.
வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அஞ்சலி
சேலம், அரியானூர் அருகே உள்ள வி.எஸ்.ஏ. கல்லூரிக்கு சென்ற ஸ்டாலின் அங்குள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர் பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகம் சமாதிக்கு சென்று, மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நெசவாளர்களுடன் சந்திப்பு
தொடர்ந்து ஸ்டாலின் வீரபாண்டியில் உள்ள அசோக் டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு வந்து பார்வையிட்டார். இங்கு விசைத்தறி கூடத்தை சுற்றி பார்த்தார். துணிகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்களிடம் குறைகளை கேட்டார்.பிறகு அங்கு திரண்டிருந்த விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி தொழில் சார்ந்தவர்களிடம் கருத்துக்களை கேட்டார். அப்போது பேசிய அவர், சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஆற்றியவர் வீரபாண்டி ஆறுமுகம் என்று கூறினார்.
நெசவுத் தொழில் நலிவு
சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள சட்டமன்ற தொகுதிகளில் 8 பேர் அதிமுக உறுப்பினர் அதில் ஒருவர் அமைச்சர். ஆனால் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் சேலத்திற்கென்று எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு செய்ய வில்லை. நெசவாளர்கள் நிறைந்திருக்கக்கூடிய இந்த பகுதியில், அவர்களின் எளிமையான கோரிக்கையான சுத்திகரிப்பு நிலையம்கூட இந்த ஆட்சியில் அமைத்துத் தரப்படவில்லை. மின்கட்டணம் உயர்வால் நெசவு தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லக்கூடிய அவலத்தை தான் இந்த ஆட்சி நான்கரை ஆண்டு காலத்தில் ஏற்படுத்தி தந்துள்ளது.
500 கிலோமீட்டர் பயணம்
அரசுப்பணிகளை ஒன்றிரண்டு ஆற்றுவதற்கு கூட முதலமைச்சரிடம் கையெழுத்து வாங்க அதிகாரிகள் 500 கிலோ மீட்டர் தூரத்தை தாண்டிச் செல்ல வேண்டிய கேவலமான நிலையை தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கெல்லாம் மக்களின் வரிப்பணம்தான் செலவாகி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார் மு.க.ஸ்டாலின்.