நாஞ்சில் சம்பத் அரசியல் துறவு.. இனி இலக்கிய மேடைதான்!
டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அரசியல் துறவரம் மேற்கொண்டுள்ளார். இனி இலக்கிய மேடைகளில் மட்டுமே அவரை பார்க்க முடியும்.
Recommended Video

சென்னை: அரசியல் துறவு பூண்டுள்ளார் நாஞ்சிலார். இனி அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டு கிடக்க விரும்பவில்லை என்றும் இலக்கிய மேடைகளில் மட்டுமே என்னை காணலாம் என்று அறிவித்துள்ளார்.
நகமும் சதையுமாக இருந்த தினகரனுக்கும் நாஞ்சில் சம்பத்திற்கும் இடையே முட்டல் மோதல் இருப்பதாக ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நாஞ்சிலார்.
குற்றால அருவியாக கொட்டும் பேச்சாற்றல் கொண்டவர் சம்பத். இலக்கிய பேச்சுக்கு பலர் ரசிகர்களாக இருந்துள்ளனர். திமுக மேடைகளில் வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் பேசுவதை கேட்கவே தனி கூட்டம் கூடும்.
வைகோவின் அடிச்சுவட்டில் அரசியலை தொடங்கியவர் நாஞ்சில் சம்பத். திமுகவில் இருந்து வைகோ விலகி தனிக்கட்சி தொடங்கிய உடன் மதிமுகவில் இணைந்தார்.

மதிமுகவில் நாஞ்சில்
நாஞ்சில் சம்பத், மதிமுகவில் இருந்த போது வைகோவின் போர்வாள் என புகழப்பட்டவர். ம.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் பலர் வெளியேறிய போது, கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும் என்று சொன்னவர். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டுப் போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது.

தலைவன் ஒருவனே
ராமாயணத்தில் வரும் அனுமன் தனது நெஞ்சில் ராமன் இருப்பதை பிளந்து காட்டியது போல, எனது ஒரே தலைவன் வைகோ தான். அவரைத் தவிர என் நெஞ்சில் யாரும் இல்லை என மார்பை பிளந்து காட்டவும் தயாராகவும் இருக்கிறேன். வைகோவுடன் பல வருடங்கள் அரசியல் பயணம் செய்த நாஞ்சில் சம்பத் நாடாளுமன்றத்துக்கோ, சட்ட சபைக்கோ செல்ல ஆசைப்படவில்லை.

அதிமுகவில் நாஞ்சிலார்
கடந்த 2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவை திடீரென சந்தித்து கட்சியில் இணைந்தார் நாஞ்சில் சம்பத். அப்போது கட்சியில் துணை கொள்கை பரப்புச் செயலாளர் என்ற பதவியையும், இன்னோவா காரையும் பரிசளித்தார். அது முதல் இன்னோவா சம்பத் என்று பலரும் கிண்டலடித்தனர். நாஞ்சில் சம்பத் மீதிருந்த அவதூறு வழக்குகள் திரும்ப பெறப்பட்டன.

சசியை விமர்சித்த நாஞ்சிலார்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் சசிகலாவை எதிர்த்தார். சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச் செயலாளர் ஆகும் தகுதி இருக்கிறது என்றால் அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளும் தகுதி எனக்கில்லை என்றார். ஜெயலலிதா தனக்கு கொடுத்த காரை அதிமுக தலைமையிடம் திருப்பிக்கொடுத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறினார்.

சசி புராணம் பாடினார்
சசிகலாவின் கணவர் நடராஜன் மூலம் நாஞ்சில் சம்பத்திடம் சமாதானம் பேசினார் சசிகலா. உடனே காரை பெற்றுக்கொண்டு அதிமுகவிற்கு திரும்பினார். சின்னம்மா புகழ் பாடினார். சசிகலா ஜெயிலுக்கு போகவே, உடன் டிடிவி தினகரன் புகழ் பாடினார். ஒரே திராவிட தலைவன் என்று வாய்க்கு வாய் புகழ்ந்தார். டெல்லி சிறையில் இருந்து தினகரன் திரும்பிய போது விமான நிலையம் சென்ற இருவரில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர்.

முதல்வர் துணை முதல்வருக்கு எதிர்ப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்த போது அதிகம் விமர்சித்தவர் நாஞ்சில் சம்பத். டிடிவி தினகரனை வீர தலைவன் என்றெல்லாம் புகழ்ந்தார். எல்லாம் ஓராண்டுகளில் கசந்து விட்டது. இப்போது தினகரனை விட்டும் விலகி விட்டார்.

விலகிய நாஞ்சில் சம்பத்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி பொதுக்கூட்டத்தை புறக்கணித்தார் நாஞ்சில் சம்பத். குரங்கணி தீ விபத்தில் தனது மைத்துனர் மகன் இறந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார். இன்று உண்மையான காரணத்தை கூறியுள்ளார்.

இனி இலக்கிய மேடைதான்
டிடிவி தினகரன் அறிவித்துள்ள கட்சி பெயரில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், அண்ணாவும் , திராவிடமும் இல்லாத டிடிவி அணியில் நீடிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத். இனி அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டு கிடக்க விரும்பவில்லை என்றும் இனிமேல் இலக்கிய மேடைகளில் என்னை காணலாம் என்றும் கூறி அரசியல் துறவறம் பூண்டுள்ளார்.

புதிய கட்சிகளில் பார்க்கலாமா?
காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கடந்த 2016ஆம் ஆண்டு அரசியலை விட்டு விலகுவதாக
கூறினார். ரஜினிகாந்தை முன்னிறுத்தி தற்போது அரசியல் செய்து வருகிறார். டிடிவி தினகரனை விட்டு விலகிய நாஞ்சில் சம்பத், கமல் கட்சியிலும் இணைய வாய்ப்பு இல்லை கூறப்படுகிறது. காரணம் அந்த கட்சியிலும் திராவிடம் இல்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மேடைகளில் ஒலித்த நாஞ்சில் சம்பத் குரல் இனி இலக்கிய மேடைகளில் மட்டுமே ஒலிக்கும்.












Click it and Unblock the Notifications