நரேந்திரமோடியால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும்: பாபா ராம்தேவ்
சென்னை: சென்னையில் உள்ள பதஞ்சலி யோகா மையத்தின் ஆசிரியர்கள் மற்றும் பாரத் சவுபிமான் அறக்கட்டளை மற்றும் பதஞ்சலி யோகா பீடத்தின் உறுப்பினர்கள் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் சென்னை வந்திருந்தார்.
சேத்துப்பட்டில் உள்ள சின்மயா பாரம்பரிய மையத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது, பாபா ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வரும் மார்ச் 23-ந்தேதி ‘யோகா உற்சவம்' என்ற பெயரில் யோகா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, உலக அளவிலான யோகா சாதனை நிகழ்த்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் நினைவேந்தலாகவும் அமையும்.
10 லட்சம் பேர்
‘யோகா உற்சவத்தின்' போது 650 இடங்களில், லட்சக்கணக்கான மக்கள் ஓரே நேரத்தில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இதில் டெல்லியில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்தியா மற்றும் உலக அளவில் லட்சக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
நரேந்திர மோடிக்கு ஆதரவு
அதைத்தொடர்ந்து மார்ச் 24-ந்தேதி முதல், இந்தியா முழுவதும் எனது ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று நரேந்திரமோடிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள். இந்த தேர்தலில் தென்னிந்தியாவிலும் நரேந்திரமோடிக்கு வாக்குகள் உள்ளன.
பாஜக 300
இந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 300 இடங்களை கைப்பற்றும். நாங்கள் அதற்கு உதவிபுரிவோம். நரேந்திரமோடி கறுப்பு பணம் மற்றும் ஊழலை வேரோடு அழிப்பார் என்று நான் நம்புகிறேன்.
ஆம் ஆத்மி நாடகமாடுகிறது
ஆம் ஆத்மி கட்சியை' பொறுத்தவரையில் நாடகமாடி வருகிறார்கள். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன், அவர்களது உயர்மட்ட அதிகார பலம் பெற்றாலும் கூட 5 முதல் 10 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெற முடியும்.
நரேந்திர மோடி காப்பாற்றுவார்
இந்தியாவை நரேந்திரமோடியால் மட்டுமே காப்பாற்ற முடியும். நரேந்திரமோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் நான் அதை நம்பவில்லை.
ஜெ-பாஜக கூட்டு
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். எனினும் தேர்தலுக்கு பின் பாரதீய ஜனதா கட்சி பக்கம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு முடிவு
பாரதீய ஜனதாவை பொறுத்தவரை மேல்மட்ட தலைவர்களிடம் ஊழல் இல்லை. எனவே பிற ஊழல்கள் களையப்படும். ஆனால், காங்கிரசை பொறுத்தவரை உயர்மட்டத்திலேயே ஊழல் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்து விடும் என்றார் பாபா ராம்தேவ்.