குலசேகரப்பட்டிணம் தசராவின்போது மாயமான சிறுமி மீட்பு - பெற்றோர் மகிழ்ச்சி
நெல்லை: குலசேகரப்பட்டிணத்தில் தசரா விழாவின் போது மாயமான சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
திருவாரூர் மன்னார்குடியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி பிரம்பாய். இவர்களுக்கு சிந்து, சங்கரம்மாள் என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சிவா கடந்த 19ம் தேதி தசரா விழாவுக்காக குலசேகரப்பட்டிணம் வந்தார். இரவில் கோயில் அருகே உள்ள பள்ளி முன்பு தங்கினார். மறுநாள் காலை அருகில் படுத்திருந்த சிந்துவை காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிவா குலசேகரப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் மற்றும் போலீசார் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் சிறுமியைக் கடத்தினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியின் படத்தை வாட்ஸ் ஆப் மூலம் நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்ட காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வள்ளியூர் ரயில் நிலையத்தில் குடும்பத்தைப் பிரிந்த சிறுமி ஒருவர் அழுது கொண்டிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அச்சிறுமி குலசேகரப்பட்டிணத்தில் காணாமல் போனவர் என அடையாளம் கண்டனர்.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து குலசேகரப்பட்டிணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து குழந்தையை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் குழந்தை ஓப்படைக்கப்பட்டது.
காணாமல் போன குழந்தை திரும்ப கிடைத்ததால் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால், குலசேகரப்பட்டிணத்தில் மாயமான சிறுமி எப்படி தனியாக வள்ளியூர் சென்றார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.