நெல்லை அருகே தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள மருந்து கழிவுகள்... பீதியில் மக்கள்
நெல்லை: நெல்லை அருகே தமிழக எல்லைப் பகுதியில் மருந்து கழிவுகள் கொட்டப் பட்டிருப்பதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் குடியிருப்புகள் அருகே உள்ள மலைப்பகுதியில் பெர்டோனியல் டயாலிசிஸ் சொல்யூஸன் என்ற லேபிலுடன் 2 லிட்டர் கொள்ளவு கொண்ட மருந்து பாக்கெட்டுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்தன.
இந்த பாக்கெட்டுகளுடன் மருந்து ஏற்றும் டியூப்புகளும் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளை குவியலாக கொட்டி விட்டு செல்வது அடிக்கடி நடக்கிறது.
தற்போது கொட்டப்படடுள்ள இடம் அருகே சில மாதங்களுக்கு முன்பு இதை போல் மருந்து பாக்கெட்டுகள் குவியல் குவியலாக புதைத்து கிடந்தன. பாதுகாப்பாற்ற நிலையில் கொட்டப்பட்டுள்ள இந்த மருந்து பாக்கெட்டுகளை சுகாதாரத்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும். இதில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறிதது மருத்துவத் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, "இந்த திரவ மருந்து சிறுநீரக பாதிப்பு அல்லது வயிற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும். டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை செய்வதற்கு மாற்றாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். வயிற்றில் சிறு துளையிட்டு இதில் உள்ள மருந்தை செலுத்தி சவவூடு பரவல் முறையில் உப்புநீரை சுத்தப்படுத்தி மற்றொறு துளை வழியாக வெளியேற்றப்படும்.
பின்னர் இந்த பாக்கெட்டுகளை மருத்துவ துறையின் அறிவுரையின்படி பாதுகாப்பான முறையில் இதற்கென செயல்படும் நிறுவனத்திடம ஓப்படைத்து அழிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இதை திறந்த வெளியில் கொட்டக்கூடாது. தற்போது வீசப்பட்டுள்ள பாககெட்டுகள் மேலும் தீ்ங்கை விளைவிக்கும்' எனத் தெரிவித்துள்ளனர்.
மருந்து பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுள்ள இடம் தமிழக - கேரள எல்லையை ஓட்டி உள்ளதால், இது கேரளாவில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருந்துக் கழிவுகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.