அந்தமானில் புதிய புயல் சின்னம்... மீண்டும் ஆரம்பிக்கும் மழை?
அந்தமான் கடல்பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: அந்தமான் கடல்பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யலாம் என வானிலை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது இன்று காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சென்னை, கடலூர், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்கள் என பல பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று பல இடங்களில் வெயில் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்கக் கடலில் அந்தமான் தீவுகள் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது. தற்போது இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. இன்று மாலைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.