53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி
பெரும்புயலால் 53 ஆண்டுகளுக்கு முன்பு சிதைந்து போன தனுஷ்கோடிக்கு தற்போது புதிய சாலை அமைக்கப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: பெரும்புயலால் உருக்குலைந்து போன கைவிடப்பட்ட நகரமான தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 1964-ஆம் ஆண்டு வீசிய புயலால் முழுமையாக போக்குவரத்துக்கு கூட வழியின்றி அழிந்த தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு அதை பிரதமர் மோடி நாட்டுக்கு அண்மையில் அர்ப்பணித்தார். ராமேஸ்வரத்திருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி.
மிகப் பெரிய தொழில் நகரமாகவும், வியாபார ஸ்தலமாகவும் இருந்த தனுஷ்கோடி, கடந்த 1964-ஆம் ஆண்டு பெரும் புயலில் சிக்கி சிதைந்து போனது. கடல் கொந்தளித்து தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது.

சிதைந்து போனது
அதுவரை அங்கிருந்த ரயில் நிலையம், தேவாலயம், தபால் அலுவலகம், குடியிருப்புகள் என அனைத்துமே முற்றிலும் சிதைந்து போய் விட்டது. இலங்கையோடு இருந்த வர்த்தக தொடர்பு கொண்டிருந்த தனுஷ்கோடி இந்த புயலுக்கு பிறகு மக்கள் வாழ்வதற்கே அஞ்சும் பகுதியாக மாறிவிட்டது.

சுற்றுலா பயணிகள்
என்னதான் அச்சம் இருந்தாலும் வரலாற்று சிறப்பு மிக்க பகுதி என்பதால் இந்த தனுஷ்கோடியை பார்க்க சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் ராமேஸ்வரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்று வந்தனர். மோசமான சாலையாக இருந்ததால் தனுஷ்கோடி சென்று திரும்புவதில் சிரமம் இருந்தது.

புனரமைப்பு
இதனால் சுற்றுலா பயணிகள் ஒன்பதரை கி.மீ. தூரம் நடந்து சென்றோ அல்லது குறைந்த அளவு கடல் நீரில் செல்லும் வாகனங்களிலோ சென்று வந்தனர். 53 ஆண்டுகளுக்கு பிறகு, தனுஷ்கோடியை புனரமைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.

நாட்டுக்கு அர்ப்பணிப்பு
அதன்படி முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை வரை ஒன்பதரை கி.மீ. தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி ரூ.71 கோடி செலவில் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த 27-ஆம் தேதி அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தனுஷ்கோடி சாலையையும் போக்குவரத்துக்காக வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இதையடுத்து புதிய சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரிச்சல்முனை கடற்கரை வரை வந்து சென்றனர். ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. 45 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த பேருந்துகளில் பயணம் செய்து தனுஷ்கோடியை பார்த்துவிட்டு திரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications