நிறைய தூது வருது.. என்னை சிந்திக்கவிட மாட்டீங்களா... பொறுமை...: கூட்டணி பற்றி விஜயகாந்த்
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடர்பாக இன்னமும் தாம் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:
சிலர் நினைக்கின்றனர் எங்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்து விடாதா? பிரிந்து விட மாட்டார்களா? என்று எண்ணுகிறார்கள். அது நடக்காது. என்னையும், என் தொண்டர்களையும் யாராலும் பிரிக்க முடியாது.
பொதுத்தேர்தலில் காலி..
இலவசங்களை கொடுக்கிறீங்க. வேலையை கொடுக்கிறீர்களா? இன்றைக்கு விவசாயிகள் தமிழகத்தில் பெரிய துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். பிரதமர் ஆவது எல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் தமிழக மக்களை கவனியுங்கள். தமிழக மக்களை சீராட்டுங்கள். இடைத்தேர்தலில் இலவசத்தை கொடுத்தால் ஓட்டுப்போடுவார்கள். ஆனால் பொது தேர்தலில் காலி செய்து விடுவார்கள்.
கோர்வையாக பேச தெரியாதே..
கோர்வையாக பேச தெரியாது என்று சொல்கிறார்கள். கோர்வையாக பேசி மக்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. மனம் என்ன சொல்கிறதோ? அதை எனக்குள் தணிக்கை செய்து பேசுகிறேன். இதில் என்ன தவறு?
காங், பாஜக மீது சாடல்
நான் காங்கிரசையும் குறை சொல்வேன். பாரதிய ஜனதாவையும் குறை சொல்வேன். தனியாக நின்றாலும் குறை சொல்வேன்.
கூட்டணி?
இதுவரைக்கும் யாருடன் கூட்டணி என்று சொல்லியிருக்கிறேனா? யாருடன் கூட்டணி, கூட்டணி என்று கேட்கிறார்கள். என் மனதில் உள்ளது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் பொறுமையாக இருக்கிறேன்.
திருமா சந்திப்பு
திருமாவளவன் சந்தித்தார். உடனே கருத்து கேட்றீர்கள். என்னை சிந்திக்க விட மாட்டீர்களா? நாட்கள் இருக்கிறது. எனது கட்சி மாநாடு இருக்கிறது. அதன் பிறகு சொல்கிறேன்.
நிறைய தூது
நிறைய தூது வருகிறது. எல்லோரும் என்னிடம் வருவார்கள். அதை பற்றியெல்லாம் சொல்ல முடியுமா?
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.