திமுகவிற்கு பெருகும் இளைஞர்களின் ஆதரவு... நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: 18 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள் மத்தியில் எந்த கட்சிக்கு ஆதரவு உள்ளது என்பது பற்றி நியூஸ் 7 நடத்திய கருத்துக் கணிப்பில், பெரும்பாலானோர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 18 முதல் 25 வயதுடையோரில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒட்டுமொத்தமாக, 39 சதவீதம் பேர் திமுகவையும், அதற்கு அடுத்து 37.43 சதவீதம் பேர் அதிமுகவையும் ஆதரிப்பதாக கூறியுள்ளனர். மற்ற கட்சிகளை 23.55 சதவீதம் பேர் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல ஊழலும் வேலைவாய்ப்பும் முக்கிய பிரச்சினையாக கருத்துக்கணிப்பு மேற்கொண்டவர்களிடம் கூறியுள்ளனர் இளைஞர்கள். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லயோலா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் திங்கள்கிழமை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஊழல் குற்றச்சாட்டு
நாமக்கல், திருநெல்வேலி, நாகை, திருச்சி, திருவள்ளூர், கன்னியாகுமரி, வேலூர், தஞ்சாவூர், திருவண்ணாலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகம் பேர், ஊழலால் தான் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து கூறியுள்ளனர்.
மது, சாதி பிரச்சினை
தருமபுரி, நாமக்கல், கோவை, காஞ்சிபுரம், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மதுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் கூறியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் அதிகம் பேர் சாதி வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விலைவாசி உயர்வு
தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், பெரம்பலூர், கோவை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விலைவாசி தான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு
இதுபோல், வேலைவாய்ப்பு தான் தங்களின் முக்கியப் பிரச்னை என திண்டுக்கல், தருமபுரி, நாமக்கல், கோவை, திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கணிசமானோர் கூறியுள்ளனர்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு
18 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள் மத்தியில், திமுக கூட்டணிக்கு அதிக ஆதரவு உள்ளது, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 18 முதல் 25 வயதுடையோரிடம் தனியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நடுத்தர வயதுடையவர்கள்
இதுபோல், 26 முதல் 40 வயதுடையோரிடம் கருத்து கேட்டபோது, அரியலூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுகவுக்கு அதிகம் பேர் ஆதரவு பெருகியுள்ளது.
அதிமுகவிற்கும் அமோக ஆதரவு
சென்னை, அரியலூர், கடலூர், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 25 வயது வரையிலான இளைஞர்களில் அதிகம் பேர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை, புதுச்சேரி, மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 26 முதல் 40 வயது வரையிலான மக்களில் அதிகம் பேர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுகவிற்கே அதிக ஆதரவு
இதுபோல், தமிழகத்தில் 26 முதல் 40 வயதுடையோரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், ஒட்டுமொத்தமாக, 41.18 சதவீதம் பேர் திமுகவுக்கும், 39.87 சதவீதம் பேர் அதிமுகவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த பிரிவினரில், மற்ற கட்சிகளுக்கு 18.96 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலவச திட்டங்களுக்கு ஆதரவு
அரசின் நலத் திட்டங்களின் நன்மை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டதில், பெரும்பாலானோர் இலவசத் திட்டங்களால் அதிக பயன் அடைந்ததாக குறிப்பிட்டனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 36.15 சதவீதம் பேர் இலவசத் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அம்மா உணவகத்திற்கு 17.46 சதவீதம் பேரும், சமச்சீர் கல்வி திட்டத்திற்கு 7.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.