சட்டசபைக்கு கருணாநிதி வந்தால் வேட்டியை உருவிவிடவா போகிறோம்? நிர்மலா பெரியசாமி ஷாக் பேச்சு
சென்னை: "திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம்" என்று அதிமுக தலைமைக் கழக பேச்சாளரும், செய்தித் தொடர்பாளருமான நிர்மலா பெரியசாமி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதிமுகவில் எந்த ஆண்டும் இல்லாத அளவாக இந்த ஆண்டு 11 பேரை செய்தி தொடர்பாளர்களாக அறிவித்திருந்தார் ஜெயலலிதா.
ஆழமாக விவாதங்கள் செய்யவேண்டும், கணீரென்று தெளிவாகப் பேசவேண்டும், மக்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஈர்க்கும்விதமாக இருக்கவேண்டும், மக்களிடம் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்து தயாரிக்கப்பட்ட இந்த லிஸ்டில் தலைமைக் கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமிக்கும் டிவி விவாதங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக, திமுக இடையே சட்டசபையில் நடந்த காரசார விவாதம் தொடர்பாக புதிய தலைமுறை டிவி சேனலில் நேர்படப் பேசு நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பாக அக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளரும், செய்தித் தொடர்பாளருமான நிர்மலா பெரியசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதியால் சட்டசபைக்கு வரமுடியவில்லை, அவருக்கு வயாதிவிட்டது பெரியவர் அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் 93 வயதில் சட்டசபைத் தேர்தலை சந்தித்த கருணாநிதிக்கு இன்னும் பதவி ஆசை இருக்கிறது.
முதல்வராக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. மக்களால் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி அவைக்கு வந்து அவருக்கு ஒதுக்கியுள்ள இடத்தில் உட்கார்ந்து ஜனநாயக கடமை ஆற்றியிருக்க வேண்டும். சபைக்கு வர வேண்டாம் என யாரும் சொல்லவில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால் எங்கள் சகோதரர்கள் என்ன அவரது வேட்டியை உருவிவிடவா போகிறார்கள்" என்று அநாகரீகத்தின் உச்சமாக பேசினார்.
முன்னாள் முதல்வர், சட்டசபையில் மூத்த உறுப்பினர், வயதில் மூத்தவர் என்ற மரியாதை கூட இல்லாமல் கருணாநிதியை பற்றி நிர்மலா பெரியசாமி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, நேயர்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
பதவி பறிப்பு:
ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்ததற்காக அ.தி.மு.க. துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்நிலையில் அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறியிருப்பதால் அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.