வேளாண் ஆராய்ச்சி மையங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்...தமிழகத்தில் 3 மையங்களுக்கு விரைவில் மூடுவிழா
நாடு முழுவதும் வேளாண்துறையின் கீழ் செயல்படும் 103 மையங்களை 60 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : நாடு முழுவதும் வேளாண்துறையின் கீழ் செயல்படும் 103 ஆராய்ச்சி மையங்களை 60 ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றில் தமிழகத்தின் 3 ஆராய்ச்சி மையங்களும் அடங்கும்.
வேளாண்துறையின் கீழ் பயிர் வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் உள்ள 103 ஆராய்ச்சி மையங்களை 60 ஆக குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் பரிந்துரையின் மீது மத்திய வேளாண் அமைச்சகம் நவம்பர் 27ல் இறுதி முடிவு எடுக்கிறது.
மூடுவிழா காண உள்ள ஆராய்ச்சி மையங்களில் தமிழகத்தை சேர்ந்த 3 மையங்களும் அடங்கும். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் மத்திய உவர் நீர் மீன் வளர்ச்சி கழகம் இந்த மூடுவிழா காணும் பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.
சென்னை மீன்வளர்ப்பு மையம்
1987ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையமானது உவர் நீரில் வளர்க்கக் கூடிய மீன்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் ஏரி, குளம், குட்டைகளில் மீன் வளர்ப்பு பற்றி பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறது. மீன்வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் புரிவோருக்கு இந்த மையம் உதவியாக இருந்து வருகிறது. சுமார் 300 பேர் இந்த மையத்தில் பணியாற்றி வருகின்றனர்.
100 ஆண்டு பழமையான மையம்
இதே போன்று கோவை மாவட்டம் வீரகேரளத்தில் உள்ள சர்க்கரை ஆலையும் மூடப்பட உள்ளதாக தெரிகிறது. 1912ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த சர்க்கரை ஆலையில் அந்தந்த பகுதிக்கு ஏற்றாற்போல எவ்வாறு கரும்பு சாகுபடி செய்வது குறித்த ஆராய்ச்சியை செய்து வருகின்றனர்.
2800 வகை கரும்பு கண்டுபிடிப்பு
இது வரை 2800க்கும் மேற்பட்ட கரும்பு வகைகள் கண்டறிப்பட்டு அவை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இருந்து 11 மாநிலங்களுக்கு கரும்பு உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதே போன்று திருச்சி அருகே செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் மூடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விவசாயிகள் எதிர்ப்பு
திருச்சியில் வாழை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு எதிராக அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். பின்தங்கிய இந்தப் பகுதியில் ஆராய்ச்சி மையம் செயல்படுவது பயன்அளிப்பதாகவும், இதனை மூடக் கூடாது என்பதும் விவசாயிகளின் கருத்தாக உள்ளது.