தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ராஜபாளையத்தில் சொல்வாராம் நா.ம.க கார்த்திக்!
சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். யாருடன் கூட்டணி என்பதை மார்ச் 2ம் தேதி ராஜபாளையத்தில் கூறுவோம் என்று நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை நாடாளும் மக்கள் கட்சி என்று மாற்றிய கார்த்திக். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பத்து தொகுதிகளில் போட்டியிடப் போவதாக திகில் கிளப்பியுள்ளார்.
கடந்த முறை விருதுநகரில் போட்டியிட்டு 17,000 ஓட்டுக்கள் வரை வாங்கிய கார்த்திக், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தோல்விக்கு காரணமாகிவிட்டார். இந்த தேர்தலில் தேனிக்கு இடம் மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
கட்சிப் பெயர் மாற்றம், தொகுதி இடமாற்றம் என தேர்தலை சந்திக்க தயாராக இருக்கும் கார்த்திக் யாருடன் கூட்டணி சேரப்போகிறார். அவரே கூறியுள்ளார் படியுங்களேன்.
கட்சியை பதிவு செய்யணும்...
குறைந்தது நான்கு எம்.பி.க்கள் இருக்க வேண்டும் - அதுவும் நான்கு மாநிலங்களில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அகில இந்தியக் கட்சியாக அங்கீகரிக்க முடியும் என்று சமீபத்துலதான் தேர்தல் கமிஷன்ல ஒரு சட்டம் வந்திருக்கிறதாம். எனவேதான் தனது கட்சியை அ.இ.நா.ம.க என்பதிலிலுந்து நா.ம.க என்று மாற்றியிருக்கிறார். ஒரு மாசத்துக்குள்ள கட்சிய பதிவு பண்ணிருவோம் என்றும் கூறியுள்ளார்.
பத்து தொகுதியில் போட்டி
தமிழகம் முழுவதும் எங்களுக்கு தனி செல்வாக்கு இருக்கு. சாதி கட்சிங்கிற பேரை உடைச்சாச்சு. பிற சாதியினரும் பெண்களும் எங்க கட்சியில சேர்ந்துட்டு இருக்காங்க. பத்துத் தொகுதியில் போட்டியிட முடிவெடுத் திருக்கிறோம் என்கிறார் கார்த்திக்.
விருதுநகர் டூ தேனி
கடந்த முறை விருதுநகரில் போட்டியிட்ட கார்த்திக் இந்தமுறை தேனியை குறிவைக்கிறதுக்கு காரணம், அங்குள்ள மக்களுக்கான உரிமையை மீட்டு எடுக்க வேண்டியதிருக்கு. அதனாலதான் அங்க கவனம் செலுத்துகிறோம் என்கிறார்.
யாருக்கு ஆதரவு
தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சிலர் கூட்டணி பேசுகிறார்கள். எப்படிப்பட்டவர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டணி அமைக்கிறோம். இன்னும் ஒருவாரத்துக்குள் முடிவு எட்டப்பட்டுவிடும்.
ராஜபாளையத்தில் அறிவிப்பு
மார்ச் 2-ல் ராஜபாளையத்தில் 'புனித மனித உரிமை விழிப்புணர்வு சந்திப்பு' கூட்டத்திற்கு நாடாளும் மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம், நாடாளும் மக்கள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்தும் பிரதமர் வேட்பாளராக யாரை ஆதரிக்கப் போகிறோம் என்பது குறித்தும் பிரகடனப்படுத்துவோம். இந்தத் தேர்தலில் நாங்கள்தான் 'டிரென்ட் செட்டர்' ஆக இருப்போம் என்கிறார் கார்த்திக்.
ஓட்டுக்களை பிரிக்கிறேனா?
நான் முக்குலத்தோர் ஓட்டுக்களை பிரிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை. நாங்க வளர்ந்துட்டு வர்றோம். இவன் வளர்கிறானேங்கிற பொறாமையில், எங்க கட்சிக்குள்ள குழப்பம் ஏற்படுத்துறதுக்காக மாற்றுக் கட்சியினர் செய்யும் விஷமப் பிரச்சாரம் இது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது
இந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சி தான் என்று நல்லாவே தெரியுது. ஆனால், மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் நாட்டுக்கு அதைவிட பேராபத்து எதுவுமில்லை. காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ. அரசு கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்துக்கும் காரணம் கூட்டணிக் கட்சிகள்தான் என்றார் கார்த்திக்.
உஷ்.. அப்பப்பா!!