இப்போதைக்கு ஜெயலலிதா டிஸ்சார்ஜுக்கு வாய்ப்பு இல்லை? #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதா எப்போது முழுக் குணமடைந்து வீடு திரும்புவார்.. இதுதான் அத்தனை பேரின் எதிர்பார்ப்புமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போதைக்கு முதல்வர் வீடு திரும்ப வாய்ப்பில்லை என்றே மருத்துவமனை வட்டாரத் தகவல்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.
[Read This: முதல்வர் ஜெயலலிதா நன்றாகத்தான் இருக்கிறார்.. ஆதாரம் என்ன தெரியுமா?]
கிட்டத்தட்ட 2 வாரங்களாகி விட்டது முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாகவும், உடல் நலம் குறித்தும் மருத்துவமனை தரப்பில் அவ்வப்போது அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும்தான் அதிகாரப்பூர்வமானதாக இருந்து வருவதால் அதை மட்டுமே மக்களும், அதிமுகவினரும் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு அவர் வீடு திரும்பக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
தயாராகிறதா போயஸ் கார்டனும், சிறுதாவூர் பங்களாவும்?
அதேசமயம், முதல்வர் விரைவில் வீடு திரும்பவுள்ளதால் போயஸ் கார்டன் இல்லமும், சிறுதாவூர் பங்களாவும் தயார் செய்யப்பட்டு வருவதாக வதந்திகள் பரவியுள்ளன. ஆனால் அதை முதல்வர் அலுவலக தரப்பில் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அது வதந்தி என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
முதல்வர் நலம் பெறுகிறார்
இதுகுறித்து முதல்வர் அலுவலகத் தரப்பில் கூறுகையில், முதல்வர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். நலம் பெற்று வருகிறார். அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இப்போதைக்கு வாய்ப்பில்லை
எனவே முதல்வர் ஜெயலலிதா இப்போதைக்கு டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பில்லை. மருத்துவமனையின் அறிவுறுத்தலின் பேரிலேயே முதல்வர் வீடு திரும்புவது குறித்து முடிவு தெரியும் என்று கூறினர்.
செப்டம்பர் 22 முதல்
முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டிருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.