பாமக 130 இடங்களில் வெல்லும்- அன்புமணிக்கு 62% ஆதரவு... இது எங்க கருத்து கணிப்பு... சொல்வது ராமதாஸ்
சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பினை போலியான ஒன்று என்றும் அதனால் மக்கள் மனதினை மாற்ற இயலாது என்றும் விமரிசித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், "தேர்தல் நேரத்தில் மிகச்சிறந்த வணிகமாக உருவெடுத்திருப்பது கருத்துக்கணிப்பு தான். அறை யில் அமர்ந்துகொண்டு ஒரு கட்சிக்கு சாதகமான புள்ளி விவரங்களை தொகுத்துத் தருவதற்கு கோடிகளில் பணம் கிடைப்பதால், கடந்த காலங்களில் அரைகுறையாக சேர்த்து வைத்திருந்த பெயரை முதலீடாக மாற்றி பலரும் கருத்துக்கணிப்பு வணிகத்தை தொடங்கி யுள்ளனர். இது ஜனநாயகத்திற்கே அவமானம்.
லயோலா கல்லூரியில் பணியாற்றிய போது மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பை தொடங்கி கருத்துக் கணிப்புகளை நடத்திவந்த பேராசிரியர் இராஜநாயகம், கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதே அமைப்பின் சார்பில் கருத்துக்கணிப்பு கடைவிரித்து நடத்தி வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக இருக்கப்போவது ஊழல் தான் என 36.10 விழுக்காட்டினரும், மது பிரச்சினை தான் என்று 23.40 விழுக்காட்டினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தம் 60% மக்களின் முக்கியப் பிரச்சினையான இந்த இரு தீமைகளையும் கடந்த 50 ஆண்டுகளில் உரம் போட்டு வளர்த்தவை இரு திராவிடக் கட்சிகள் தான். அவ்வாறு இருக்கும்போது அக்கட்சிகளுக்கு 66.40% மக்களின் செல்வாக்கு இருப்பதாக தெரிவித்திருப்பதில் இருந்தே இந்த கருத்துக்கணிப்பு மோசடியானது என்பது தெளிவாகும்.
பூச்சி மருந்து ஊழல், பழைய வீராணம் ஊழல் தொடங்கி உலகையே அதிர வைத்த 2ஜி ஊழல் வரை அனைத்து ஊழல்களின் கதாநாயகன் தி.மு.க. தான். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி என்று சர்க்காரியா ஆணையத்தால் விமர்சிக்கப்பட்டது தி.மு.க. தான். அதேபோல், அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து ஊழல் சுனாமியாக உருவெடுத்திருப்பது அதிமுக ஆகும்.
மதுவிலக்கிற்காக உறுதியாக போராடும் கட்சிகளில் முதலிடம் (22.40%) பா.ம.க.வுக்கு என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது. மது தான் வரும் தேர்தலின் முடிவுகளை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இருக்கும் என்று 23.40% மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பா.ம.க.வுக்கு குறைந்த வாக்குகளே கிடைக்குமாம். இந்த சறுக்கலை சமாளிப்பதற்காக மது முக்கியப் பிரச்சி னையாக இருந்தாலும், அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று 51.4% மக்கள் கருதுவதாக இடையில் ஒரு வரி சேர்க்கப்பட்டிருக்கிறது. மனசாட்சியும், ஆறாவது அறிவும் உள்ள எவராலும் இதைப் போன்று மோசமான கருத்துத்திணிப்பை வெளியிட முடியாது. மனசாட்சியை விற்றவர் களால் தான் இது சாத்தியம்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், இந்த கருத்துக் கணிப்பு 5464 பேரிடம் மட்டும், அதாவது ஒரு தொகுதிக்கு 23 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. 10,000 பேருக்கு ஒருவர் வீதம் நடத்தப்படுவது கருத்துக் கணிப்பாக இருக்காது; திணிப்பாகவே இருக்கும்.
2011 மற்றும் 2014 தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியை தூக்கி நிறுத்துவதும், திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்து வரும் பா.ம.க.வின் வளர்ச்சியை மறைப்பதும் தான் இந்த கருத்துக்கணிப்பின் நோக்கம் ஆகும். ஏற்கனவே பல நிறுவனங்களின் மூலம் கருத்துக்கணிப்பை நடத்தியும், பல ஊடகங்களை விலைக்கு வாங்கியும் தங்களுக்கு சாதகமான தோற்றத்தை ஏற்படுத்த அக்கட்சி முயல்கிறது. இதுபோல் எத்தனை வித்தைகளை செய்தாலும் அக்கட்சிக்கு வெற்றி கிட்டாது.
பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையை அறிந்து கொள்வதற்காக பா.ம.க. சார்பில் அண்மையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பா.ம.க 120 முதல் 130 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்க்கு 62% ஆதரவு உள்ளது. தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க. தான் என்று 73% மக்கள் தெரிவித்துள்ளனர். இது தான் உண்மை. மோசடியாக கருத்துத் திணிப்புகளை வெளியிட்டு மக்கள் மனநிலையை மாற்ற முடியாது. வரும் தேர்தலில் பாமக பெரும் வெற்றி பெறப்போவது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.