வரி இல்லாத பட்ஜெட்டா? அப்போ அது என்ன கணக்கு? தமிழிசை கிடுக்கிப்பிடி கேள்வி
தமிழக அரசு அண்மையில் வாட் வரியை உயர்த்தி விட்டு வரி இல்லாத பட்ஜெட் என்று மக்களை ஏமாற்றுகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை: பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை உயர்த்தி விட்டு தற்போது தமிவக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரி விதிப்புகள் ஏதும் இல்லை என்று ஏமாற்றுவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக அரசின் 2017-18-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதி அமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்தார். ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பட்ஜெட்டில் வரி ஏதும் விதிக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாவது: மற்ற மாநிலங்களைக் காட்டிலும் காப்பீடு திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வருமானத்தை பெருக்க...
ஆனால் காப்பீடு திட்டங்கள் மற்ற மாநிலங்களில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருமானத்தை பெருக்குவதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
பயிர்கடன் மானியத்துக்கு சொற்பமே
விவசாயிகள், பயிர்கடன் மானியத்துக்கு மிக சொற்ப அளவிலான கோடிகளையே ஒதுக்கியுள்ளனர். தமிழக மக்களுக்கு எந்தவித பலனையும் அளிக்காத பட்ஜெட். அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள நிதி மிகவு்ம குறைவாகும்.
திட்டங்களுக்கும், நிதிக்கும் சம்பந்தமில்லை
இவர்கள் தெரிவித்துள்ள திட்டங்களுக்கும் அதற்கு ஒதுக்கியுள்ள நிதிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. நகர்ப்புற திட்டங்களுக்கு ரூ.272 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
தண்ணீர் பஞ்சத்தை போக்க
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நகர்ப்புறங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க திட்டங்கள் ஏதும் இல்லை. வேலைவாய்ப்புகளை மேம்படுத்த எந்த திட்டமும் இல்லை.
வாட் வரி என்னது?
பட்ஜெட்டுக்கு முன்பே வாட் வரியை உயர்த்திவிட்டு தற்போது வரியில்லாத பட்ஜெட் என்று ஏமாற்றுகின்றனர். தமிழக அரசு ஒதுக்கிய நிதியில் திட்டத்தை ஆரமபிக்கக் கூட முடியாது, இதில் செயல்படுத்துவது எப்படி? என்றார் அவர்.