செப்.20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது.. சபாநாயகருக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: அடுத்தவாரம் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று துவங்கியது.
திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகினார். முதல்வரும், ஆளுநரும் கூட்டாக சேர்ந்து ஒரு அணியாக செயல்படுகின்றனர். திமுகவை சேர்ந்த 21 மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள்19 பேர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது எனக்குற்றம்சாட்டினார்.
தினகரன் தரப்பும் சேர்ந்தது
இந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோதே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி முறையிட்டார். இந்த வழக்கில் எங்கள் தரப்பையும் வாதிட அனுமதி வழங்க வேண்டும் என கோரினார்.
பதில் கேட்ட நீதிபதிகள்
இதனையடுத்து நீதிபதிகள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளரிடம் கேட்டு இன்று மதியம் 2.15க்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞரிடம் கூறினர்.
நடவடிக்கை எடுப்போம்
இதையடுத்து அரசு வழக்கறிஞர் மதியம் அளித்த பதிலின்போது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். எம்எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கி விட்டது. நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உத்ரவாதம் அளிக்க முடியாது. சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினார்.
பெரும்பான்மையை நிரூபிக்க தடை
இந்த பதிலை கேட்டதும், தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க முயற்சிகள் நடக்கிறது என்று திமுக மற்றும் தினகரன் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் வரும் செப்டம்பர் 20 வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு கூடாது என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சபாநாயகர், சட்டசபை செயலாளர், ஆளுநரின் செயலாளர் ஆியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.