சுனாமி 10 ஆம் ஆண்டு நினைவு... அதிகாரப்பூர்வ அஞ்சலி நிகழ்ச்சி நடத்தாத தமிழக அரசு!
சென்னை: சுனாமி தாக்கியதன் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழக அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியும் நேற்று நடத்தப்படவில்லை.
தமிழகத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு உலுக்கி எடுத்த சுனாமி நினைவு நாள் நேற்று பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டது. புதுச்சேரி அரசும் நிகழ்ச்சிகளை நடத்தியது.
ஆனால் தமிழக அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்வுமே நடத்தப்படவில்லை. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுவிட்டார். வருவாய்த் துறை செயலராக உள்ள ஆர். வெங்கடேசனோ தாம் தற்போதுதான் இத்துறைக்கு வந்திருப்பதால் இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்கிறார்.
வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர்தான், பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தின் தலைவராகவும் இருக்கிறார். அவர் சுனாமி தொடர்பான கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுவிட்டார்.
தமிழக அரசு அதிகாரிகளைப் பொறுத்தவரையில் நாங்கள் தொடர்ச்சியாக சுனாமி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை நடத்தி வருகிறோம் என்று பட்டும் படாமலும் பதில் கூறுகின்றனர். ஆனால் அதிகார்ப்பூர்வமாக எந்த ஒரு அரசு நிகச்சியும் நடத்தப்படவில்லை என்பது சுனாமி பலிகொண்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உறவினர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.