‛‛விஜய் காலில் விழ யாரும் சொல்லவில்லை’’.. அவரை பார்த்ததும் அழுகை வந்திடுச்சி - கள்ளக்குறிச்சி பெண்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சையில் இருப்பவர்களை நடிகர் விஜய் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த வேளையில் பெண் ஒருவர் அவரது காலில் விழுந்து அழுதார். இந்த பெண்ணை விஜய் காலில் விழும்படி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கூறியதாக வீடியோ வெளியானது. இந்நிலையில் தான் ‛‛என்னை யாரும் விஜய் காலில் விழ சொல்லவில்லை. அவரை பார்த்ததும் அழுகை வந்துவிட்டது'' என அந்த பெண் விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி 50 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கி உள்ளது. கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக 15க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான விஜய் நேற்று நேரடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு சிகிச்சை விபரங்கள் பற்றி அவர் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த சமயத்தில் பெண் ஒருவர் விஜயின் காலில் விழுந்து தனது கணவரை காப்பாற்றுபடி அழுதார். அவரை நடிகர் விஜய் அரவணைத்து அவருக்கும், சிகிச்சை பெற்று வரும் அவரது கணவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் நடிகர் விஜய் வருவதற்கு சில நொடிக்கு முன்பு ஒருவர் அந்த பெண்ணின் காதில் ஏதோ பேசுகிறார். அவர் என்ன பேசினார்? என்பது வீடியோவில் கேட்கவில்லை.
ஆனால் அவர் பேசிய அடுத்த சில நொடிகளில் நடிகர் விஜயை பார்த்ததும் அந்த பெண் அவரது காலில் விழுகிறார். இந்த வீடியோவை இணையதளத்தில் ஒரு தரப்பினர் பகிர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கூறிய பிறகே அந்த பெண் விஜய் காலில் விழுந்து அழுததாக குற்றம்சாட்டி வருகின்றனர். அதோடு நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியின் நிர்வாகிகளை விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினர் எதிர்தரப்பினரை விமர்சித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் விஜய் காலில் விழுந்த பெண், விஜய் வந்தபோது என்ன நடந்தது என்பது பற்றி விளக்கமளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛விஜய் வந்தவுடன் என்னால் அழுகையை தாங்க முடியவில்லை. நான் அவரை கட்டிப்பிடித்து அழுதேன். நாங்கள் இல்லாதவங்க (அதாவது ஏழை குடும்பம்). நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர் அழுகாதீங்க.. அழுகாதீங்க என்று கூறினார்.
எங்களுக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை. விஜய் வந்தபோது என்னிடம் நீங்கள் யார் என்று கேட்டனர். அதற்கு நான் சிகிச்சை பெறுவோரின் வீட்டுக்காரங்க(மனைவி) என்று கூறினேன். அதற்கு நீங்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். விஜய் பேசலாம் என்று கணவரின் கால் பக்கத்தில் நிற்கும்படி என்னை தள்ளிவிட்டனர்.
விஜய் வரும்போது என் கணவருடன் நான் மட்டும் தான் இருந்தேன். விஜய் போன்று இப்படி பக்கத்தில் வந்து யாரும் நலம் விசாரிக்கவில்லை. அதேபோல் வைகோவின் மகன் வந்து பார்த்துவிட்டு பெண்களின் பேச்சை கேட்க வேண்டும் என்று புத்தி கூறினார்'' என்றார். மேலும் உங்களை யாராவது விஜய் காலில் விழ சொன்னார்களா? என்று கேட்டதற்கு, ‛‛அப்படி யாரும் சொல்லவில்லை'' என்று விளக்கமளித்துள்ளார். இந்த பெண்ணின் விளக்க வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக நடிகர் விஜய் கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications