அரசியலுக்கு வந்தது ஓகே.. அந்த வார்த்தையை ரஜினி சொல்லியிருக்க கூடாது.. மயில்சாமி ஆதங்கம்
சென்னை: ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் மயில்சாமி சில ஸ்ட்ராங் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அரசியலில் குதிப்பதாக ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். இதையடுத்து டிவி சேனல்களில் அதுதொடர்பான விவாதங்கள் களை கட்டியுள்ளன. நடிகர் மயில்சாமியும், டிவி விவாத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று தனது கருத்துக்களை எடுத்துக்கூறினார்.
டிவி விவாத நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி கூறிய கருத்துக்களை பாருங்கள்:
சஸ்பென்ஸ்
அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினிகாந்த், அடுத்த 3 வருடங்கள் அரசியல் பற்றி நீங்களும் பேசக்கூடாது, நானும் பேசமாட்டேன் என்று சொன்னதில் சஸ்பென்ஸ் உள்ளது. 'சாரை' பற்றி நன்கு தெரியும். வாரத்திற்கு ஒருமுறை பேசுவோம். நல்ல விஷயங்களை பற்றிதான் பேசுவோம் யாரையும் குறை சொல்லமாட்டார். பட், நானும் பேச மாட்டேன் நீங்களும் பேசாதீர்கள் என்கிறார். தேர்தலுக்கோ இன்னும், 3 வருடம் காலம் உள்ளது.
உள்ளாட்சியில் போட்டி
நமது கட்சி அடிப்படையை வலுப்படுத்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம். நாடாளுமன்ற தேர்தலிலும் பணியாற்றலாம். பின்னர், சட்டசபை தேர்தலை சந்திக்கலாம் என சொல்லியிருக்கலாம்.
234 தொகுதிகளில் தனித்து போட்டி
ரஜினி சொன்ன நல்ல ஒரு வசனம், ரசிகர்களுக்கு வீரத்தை ஊட்டும் ஒரு வசனம், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என கூறும்போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் அந்த ஒரு விஷயத்தை நம்மால் ஏற்க முடியாது. ஏனெனில் இனி எந்த ஒரு கட்சியாலும், தமிழகத்தில் தனித்து ஆட்சியமைக்க முடியாது.
ரஜினிக்கு சிக்கல்
இப்படி அவர் சொன்னது பெரிய மைனஸ். நாளைக்கு கூட்டணி அமைத்தால், ரசிகர்களை அதை கேள்வி கேட்பார்கள். ரசிகர்கள் சந்தோஷப்பட்டுவிட்டார்கள். இனிமேல் அந்த நிலைப்பாட்டை மாற்றினால் ரசிகர்கள் கோபப்படுவார்கள்.
யோசித்தே முடிவு
அரசியலுக்கு வருகிறேன் என்பதை யோசிக்காலம், ரஜினி சாதாரணமாக கூறியிருக்க மாட்டார். இந்தியாவில் இருக்கிற அத்தனை அரசியல்வாதிகளும் அவருக்கு பழக்கம். அத்தனை நடிகர்களும் அவருக்கு பழக்கம். ரஜினியின் நண்பர் சிரஞ்சீவி கட்சி தொடங்கி பிறகு காங்கிரசில் இணைந்தார். இதையெல்லாம் ரஜினி யோசிக்காமல் அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருக்க மாட்டார்.
குரல் கொடுத்தாக வேண்டும்
நேற்று வரை அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இனிமேல் அவர் அரசியல்வாதி. இனிமேல் கன்னியாகுமரியில் ஒரு பிரச்சினை வந்தால் அவர் குரல் கொடுத்தாக வேண்டும், இனிமேல் மழை வெள்ளம் வந்த பிறகு அவர் கீழே இறங்கி வேலை பார்த்தாக வேண்டும். டிவி, பிரஸ் மீட் மட்டுமே இனி போதாதது. இவ்வாறு மயில்சாமி தெரிவித்தார்.