5 நகரங்களில் 104 டிகிரி... தமிழகத்தில் வெப்ப அலை எச்சரிக்கை இல்லை... வறண்ட வானிலை நிலவும்!
சென்னை: தமிழகத்தில் திருச்சி, சேலம் உட்பட 5 நகரங்களில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகத் தொடங்கியது.
இந்நிலையில், தமிழகம், ஓடிசா, ஆந்திரம், ராயலசீமா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனால் தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் என மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி நேற்று மாலை நிலவரப்படி, கரூர் பரமத்தி, திருச்சி, சேலம், தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது தெரிய வந்துள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக வேலூர், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் நிலவியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்து வரும் நாள்களுக்கு பெரும்பாலான நகரங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரிக்கு வெப்ப அலை எச்சரிக்கை ஏதுமில்லை. அதிகப்பட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.