வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம்.. நாகையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை: ஆட்சியர்!
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடல் உள்வாங்கி விட்டதாகவும் இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாகவும் சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. மேலும் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வீடியோ ஒன்றும் தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மறுத்துள்ளார். மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று கூறிய அவர் மக்கள் வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
நாகையில் சுனாமி என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி எடுக்கப்பட்ட பேரிடர் ஒத்திகை வீடியோவை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அச்சமடைய வேண்டாம் என்றும் ஆட்சியர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.