வடகிழக்குப் பருவமழை தீவிரம்: தமிழகத்தில் நிரம்பி வழியும் ஏரிகள், குளங்கள்
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு பருவமழை சென்னை, கடலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது.
காஞ்சிபுரம் மழை
ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்திலும் 3 நாட்கள் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பி வருகின்றன. இதில், பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள மதுராந்தகம் பெரிய ஏரி முக்கியமானதாகும்.
நிரம்பிய மதுராந்தகம் ஏரி
இதன் முக்கிய நீர் வரத்தான கிளியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், 4,752 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் அதன் முழு கொள்ளளவான 21.5 அடியை எட்டியது. தற்போது 609 மில்லியன் கனஅடி நீர் தேங்கியுள்ளது. இன்னும் ஒரு அடியை நீர்மட்டம் தாண்டும்பட்சத்தில் கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும்.
பொதுமக்கள் உற்சாகம்
4 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் நீர் நிரம்பிய ஏரியை பார்ப்பதற்காக கூட்டம், கூட்டமாக வருகின்றனர். நீர் நிரம்பியதை அடுத்து பொதுப் பணித்துறை மற்றும் வரு வாய்த் துறையினர் ஏரியின் நீர்வரத்து மற்றும் அணையின் பாதுகாப்பு, கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்.
நிரம்பி வழியும் ஏரிகள்
ஏரி மாவட்டமான காஞ்சிபுரத்தில் 912 ஏரிகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரிகள் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஏரிகளாக கருதப்படும் தென்னேரி ஏரி 13 அடி, உத்திரமேரூர் ஏரி 7.5, மதுராந்தகம் ஏரி 21.5 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பு
இதேபோல், செங்கல்பட்டு வட்டத்தில் 44, காஞ்சிபுரம் வட்டத்தில் 49, மதுராந்தகம் வட்டத்தில் 6 என மொத்தம் 99 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இவைதவிர 282 ஏரிகள் 75 சதவீதம் மற்றும் 531 ஏரிகள் 50 சதவீதம் நீர் நிரம்பியுள்ளதாக, மாவட்ட பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கனமழை
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்துவரும் கன மழையினால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையினால் கும்பகரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தொடர்மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை நதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தைத் தொடர்ந்து, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக உள்ள சாத்தனுார் அணைக்கு, நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது
சாத்தனூர் அணை 100 அடி
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநில நந்திதுர்கா மலைப்பகுதி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால், தென்பெண்ணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணை நிரம்பி, அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், கிருஷ்ணகிரி அணை நிரம்பி வழிகிறது. இந்த உபரி, நீர் முழுவதும் சாத்தனுார் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது அணை நீர்மட்டம் தற்போது 100 அடியாக உள்ளது.
மேட்டூர் அணை
தொடர்மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 80 அடியை எட்டியுள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழைநீடிக்கும்
கேரளா அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமாவட்டங்களில் மழை
வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.