குடிச்சாதான் 'குண்டக்க மண்டக்க' என்றில்லை.. குடிக்காவிட்டாலும் கூட இப்படித்தான் பேசுவார்கள்!
சென்னை: குடிகாரர்களுக்கு ஆதரவாக இப்போது சங்கம் வந்தாச்சு. அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து பல கேள்விகளை சரமாரியாக கேட்டுள்ளனர்.
ஒவ்வொரு கேள்வியும் தவுசன்ட் வாட்ஸ் பல்பு போல பளீர் பளீர் என இருக்கிறது. எப்படி மது அருந்துவோரை கைது செய்யலாம் என்பதுதான் அவர்களது முதல் கேள்வியே.. அதேபோல தங்களுக்கு பாதுகாக்கப்பட்ட மது கிடைக்க வகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மது அருந்துவோர் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் குடிகாரர்கள் கூடி வைத்துள்ள சங்கமானது தூத்துக்"குடி"யை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுமாம். அதன் தலைவராகியுள்ளார் பால்ராஜ். இந்த சங்கத்தின் சார்பில் 10 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று முதல்வர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பால்ராஜ் விளக்கியதாவது:
கொஞ்சம் கூட வெட்கமே கிடையாது
மது அருந்துவதை வெளியில் சொல்வதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை. எங்கள் சங்கத்திற்கு ஆதரவு அதிகமாக உள்ளது. ஆனால் வெளிப்படையாக சேருவதற்கு நிறைய பேர் வெட்கப்படகின்றனர்.
இறைவன் படைத்த மது
மது இறைவனால் படைக்கப்பட்டது. மதுவை அளவோடு அருந்தினால் வளமாக வாழலாம். ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக குடித்து, தங்களையும் கெடுத்து, குடும்பத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள்.
போதைப் பிரியர்களுக்கு பாதுகாப்பு தருவோம்
போதை பிரியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டும் அல்லாமல், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் எங்கள் சங்கத்தின் நோக்கமாக உள்ளது.
கைது செய்து இழிவுபடுத்துவதா..
அரசு அனுமதியுடன் நடத்தப்படும் பாரில் மது அருந்திவிட்டு, வெளியில் வந்தவுடன் போலீசார் கைது செய்து இழிவுபடுத்துகிறார்கள். இந்த போக்கை போலீசார் கைவிட வேண்டும்.
கம்ப்யூட்டர் பில் கொடுங்க பாஸ்...
அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் அரசு நிர்ணயித்த விலையை விட, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. மதுக்கடைகளில், வாடிக்கையாளர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பில் கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பீர் கடைகள் நிறைய தேவை...
மதுக்கடைகளிலும், பார்களிலும் நடக்கும் தவறுகளை கண்டறிய அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும். பீர் கடைகளை அதிகமாக திறக்க வேண்டும்.
கரப்பன் பூச்சி இல்லாம சரக்கு கொடுங்கப்பா
மதுபாட்டில்களில் கரப்பான் பூச்சிகள் கிடக்கின்றன. மதுவை சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீங்களே விற்கிறீங்க.. நீங்களே கேஸ் போட்டா எப்படி
நகர்ப்புறங்களில் போதைபிரியர்கள் மீது வாகன சோதனை செய்து போலீசார் வழக்கு போடுகிறார்கள். அரசாங்கமே மதுவை விற்பனை செய்துவிட்டு, போலீசாரை விட்டு மது அருந்துபவர்களை கைது செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்.
தமிழகம் முழுவதும் சங்கம் திறப்போம்
எங்கள் சங்கம் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் பால்ராஜ்.