இந்த மழை வெள்ளத்தில உசுர கையில புடிச்சுட்டு ஆபிஸ் போற மக்களே... நீங்க திறமைசாலிதான்!
சென்னை: நான்கு நாட்கள் பெய்த மழைக்கே பல்லாங்குழியாக மாறிப்போனது சென்னை சாலைகள். எங்கே கழிவுநீர் சாக்கடை மூடி திறந்திருக்கோ தெரியலையே என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்து வாகனம் ஓட்டி அலுவலகம் சென்று சேர்கின்றனர் சென்னைவாசிகள். மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு வந்து வீடுகளுக்குள் புகுந்து விட்டதால் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தூக்கமின்றி தவிக்கின்றனர் குடியிருப்புவாசிகள். ஒரு சிலரோ... இது சமாளிக்க முடியாது சாமி என்று கூறிவிட்டு நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்து விட்டனர்.
புயல்னு வந்தாத்தான்ய சென்னை நகரத்துல மழையை எதிர்பார்க்க முடியும்... இல்லைன்னா தண்ணிக்கு கூட நாயா அலையணும் என்று கடந்த செப்டம்பர் மாதம் வரை பேசிக்கொண்டிருந்தனர். ஏரிகள் வத்திப்போச்சே... குடிநீர் தட்டுப்பாடு வந்திருமே என்று ஊடகங்கள் கவலைப்பட... எதிர்கட்சியினரோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலையே தண்ணீர் தட்டுப்பாடு வந்து மக்கள் கவலைப்பட போறாங்களே என்று அவர்கள் பங்கிற்கு அறிக்கை விட்டனர்.
இதில் அதிகம் கவலைப்பட்டது ரமணன்தான். காரணம் இல்லாமல் இல்லை. புயலோ, மழையோ வந்தால்தானே அவரை நோக்கி படையெடுப்பார்கள். உடனே தலையை ஆட்டியபடி அவர் சொல்லும் வானிலை அறிக்கையை கேட்டாலே போதும் வந்த மழை கூட சில நேரங்களில் ஓடி விடும்.
கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
கவலைப்படாதீங்க மக்களே இதோ வந்துட்டோம்ல என்று தீபாவளிக்கு முதல்நாள் கடலூர் அருகே கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம். இதில் கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொட்டி தீர்த்து விட்டது கனமழை.
விடிய விடிய மழை
சென்னை மழைக்கு தப்பி தென் மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் நேற்று ஊர் திரும்பவே அவர்கள் ஆறுதல் படும் வகையில் பகல் முழுவதும் ஓரளவுக்கு வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென இரவு 7 மணியளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டி தீர்த்தது.
தொடரும் மழை
வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புழல், செங்குன்றம், தாம்பரம், மீனம்பாக்கம், உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தேங்கிய தண்ணீர்
நான்கு நாட்களாக பெய்த மழையில் நாறிப்போன சாலைகள் குண்டும் குழியுமாக சிதைந்து சிறு சிறு குட்டைகளாக மாறியுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளில் பாதையே தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தார் சாலை எங்கேப்பா?
புதிதாக போடப்பட்ட சாலைகளில் தார்கள் கரைந்து தண்ணீரோடு தண்ணீராக சென்றுவிட்டது. இதனால் அந்த சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாலும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போய் வருகின்றனர்.
குளமாக மாறிய சுரங்கப்பாதை
மழை வெள்ளத்தில் நகரமே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட இதுவரை நிவாரண பணிகளில் எந்த வேகமும் காட்டவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. பல இடங்களில் சுரங்கபாதைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதைகள் முடங்கியுள்ளது.
சாய்ந்த மரங்கள்
காற்றோடு பெய்த மழையால் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. அந்த மரங்களே இன்னும் பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படாத நிலையில், நேற்று மேலும் 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. இவைகளும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் கிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.
ஆபிஸ் வந்துட்டேன்
மேட்டுப்பாங்கான பகுதிகளான எழும்பூர், தேனாம்பேட்டை, பிராட்வே, கோடம்பாக்கம், முதல்வர் குடியிருக்கும் போயஸ் கார்டனை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணாசாலை, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், தி.நகர், வடபழனி 100 அடி சாலை, கோயம்பேடு என அனைத்து சாலைகளும் மழைக்கு சிதிலமடைந்து இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டுவிட்டது. நான் பத்திரமா ஆபிஸ் வந்துட்டேன் என்று வாட்ஸ் அப்பில் தகவல் சொன்ன பிறகுதான் இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் சாயந்திரம் மழையில சிக்காம பத்திரமா வீடு திரும்பனுமே என்று சாமியை வேண்டிக்கொண்டுள்ளனர் சில இல்லத்தரசிகள்.