கரூரைக் கலங்கடிக்கும் டெங்கு.. மேலும் ஒரு சிறுமி பலி.. மக்கள் சாலை மறியல்
கரூர்: கரூரில் டெங்குக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலியாகியுள்ளார். சுகாதாரத் துறை டெங்கு ஒழிப்பில் தீவிரம் காட்டாமல் இருப்பதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அருகே நெரூர் தென்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் கடந்தி சில தினங்களுக்கு முன்னர் 4 ம் வகுப்பு மாணவி தர்ஷினி என்ற மாணவி (10) டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இந்நிலையில் இது வைரல் காய்ச்சல் என கூறி சுகாதார துறையினர் இந்த செய்தியை மூடி மறைத்தனர்.
இந்த நிலையில், அங்கு டெங்கு காய்ச்சல் பரவி 3 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மக்களிடையே கொதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூவரையும் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஆனால் இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி திருச்சி, சேலம், மதுரை என பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சைலஜா (10) என்ற 4 ம் வகுப்பு மாணவி, அனுதர்ஷினி 2 ம் வகுப்பு மாணவி, 7 மாத கைக்குழந்தை சக்திவேலு, ஒன்றரை வயது கைக்குழந்தை கவிதர்ஷினி, மூதாட்டி பாப்பாயி உள்பட 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் பின்னணியில் நேற்று இரவு ரங்கநாதன்பேட்டையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தேசிகா (12) தொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல் நீடித்து வந்ததால் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து அழரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தேசிகா உயிரிழந்தார்.
டெங்கு ஒழிப்பிலும், தடுப்பிலும் சுகாதாரத் துறையினர் மெத்தனமாக இருப்பதால்தான் அடுத்தடுத்து இரு சிறுமிகள் உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் சாலை மறியலில் குதித்தனர். சிறுமியின் உறவினர்களும் சாலை மறியலில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.