ஒன்வே... டேக் டைவர்வர்சன்... மேம்பாலம் பழுது... ஸ்ஸப்பா, மெட்ராஸ்ல வண்டி ஓட்டறது ரொம்ப கஷ்டம்!
திருமலை என்றொரு படம்.. அதில் வேலைக்கு இன்டர்வியூவுக்குப் போவார் விவேக். அண்ணா சாலைக்குச் செல்ல விஜய்யின் பைக்கில் ஏறுவார். வழியெங்கும் டேக் டைவர்சன் சொல்லி வழிகளை மாற்றி மாற்றி அனுப்புவார்கள் காவலர்கள்.
கடைசியில் ஒரு பொட்டல் வெளியில் போய் வண்டியை நிறுத்த, அந்த வழியாக வரும் செல்முருகன், விவேக்கின் கையில் பெரிய லட்டை வைத்து ஏழுகொண்டவாடா, என்பார்.
இன்றைய சென்னையின் போக்குவரத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த நகைச்சுவைக் காட்சி.
அண்ணா சாலையே ஒன்வேதான்..
அண்ணா சாலையை ஒருவழிப் பாதையாகப் பார்ப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. இன்று மெட்ரோ ரயிலுக்காக ஆங்காங்கே சிறுசிறு பாதைகளாக, ஒருவழிப் பாதையாக, ஒற்றை வாகன வரிசை ஊறும் பாதையாகக் காட்சி தருகிறது அந்த பெருஞ்சாலை!
நெனச்சுப் பார்க்க முடியலீங்க..
முன்பெல்லாம் பூந்தமல்லியிலிருந்து பாரீஸுக்கு இருசக்கர வாகனங்களில் செல்ல அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் போதும். அதுவும் அரக்கப் பறக்க செல்லாமல், நிதானமாகவே செல்லலாம். இப்போது இதே பூந்தமல்லியிலிருந்து கோயம்பேடு, சென்ட்ரலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.
கண்ணைக் கட்டுது
இன்னும் வடபழனி, தி நகர், வட சென்னைப் பகுதிகளுக்குச் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை நினைத்தால் மனம் சோர்ந்து, அந்த பயணத்தையே ரத்து செய்துவிடும் மனநிலைக்கு வந்துவிடுவோம். பாரிஸூக்குக் கூட எளிதில் போய்விடலாம், ஆனால் இந்தப் பாரிமுனைக்குப் போவதை நினைத்தால் கண்ணைக் கட்டுது!
வடபழனி ஒன்வே
ஒன்வே எனப்படும் ஒருவழிச்சாலை என்பது ஒரு தற்காலிக தீர்வாக அறிமுகப்பட்டதுதான். ஆனால் இன்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் இந்த ஒருவழிப் பாதை என்பதே நிரந்தரமாகிவிட்டது.
சென்னை வடபழனியில் தபால் அலுவலகத்திலிருந்து நூறடிச் சாலையைக் கடக்க அதிகபட்சம் 300 மீட்டர் தூரம் கூட இல்லை. ஆனால் அங்கு ஒரு நோ என்ட்ரி. இந்த 300 மீட்டருக்கு பதில் கிட்டத்தட்ட 2 கிமீ சுற்றி வந்து ஆதித்யா ஹோட்டல் வழியாக ஆற்காடு சாலையில் கலக்க வேண்டும்.
சுற்றலில் விடுகிறார்களே..
முன்பெல்லாம் அண்ணாசாலையிலிருந்து ஜிஎன் செட்டி சாலை அல்லது கோடம்பாக்கம் செல்ல, காமராஜர் அரங்கை ஒட்டியுள்ள சாலையில் சென்றால் எளிதாக இருக்கும். இப்போது அந்த சாலை ஒன்வே. எந்த சந்தில் திரும்ப வேண்டும் என்ற ஐடியா இல்லாமல் ஜெமினி மேம்பாலம் ஏறிவிட்டீர்களென்றால், ஒயிட்ஸ் சாலை வரை சென்று யு டர்ன் எடுக்க வேண்டும். கிட்டத்தட்ட 2 கிமீ தூரம். அதேபோல சத்யம் தியேட்டருக்கு செல்ல, வாகன ஓட்டிகள் சுற்றும் சுற்று இருக்கிறதே.. ஏதோ திருப்பதி தரிசனத்துக்காக பக்தர்களை சுற்றலில் விடுவார்களே... அப்படி இருக்கும்.
நிலவுக்கே போய் வரலாம்
சென்னையில் மட்டும் இன்றைய தேதிக்கு சராசரியாக 40 லட்சம் கார்கள் மற்றும் பைக்குகள் ஓடிக் கொண்டுள்ளன. இந்த ஒரு வழிப் பாதை சமாச்சாரத்தால், இத்தனை வாகனங்களும் நாளொன்றுக்கு கூடுதலாக பயணிக்கும் தூரம்.. பூமியிலிருந்து நிலவுக்குப் போய்வரும் தூரம்... 3.84 லட்சம் கிமீ!!
27000 லிட்டர் பெட்ரோல்
இந்த ஒரே காரணத்தால், கார், இருசக்கர வாகன ஓட்டிகள் நாளொன்றுக்கு ரூ 20 லட்சம் வரை கூடுதலாக எரிபொருளுக்கு செலவழிக்கின்றனர் என்கிறது ஒரு கணக்கு.
இந்த 40 லட்சம் வாகனங்களில் குறைந்தது பத்து சதவீதமாவது அரை கிமீ முதல் 2 கிமீ வரை மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது தினசரி. சராசரியாக ஒரு கிமீ என்றாலும் கூட, 27000 லிட்டர் பெட்ரோல் கூடுதலாகக் குடிக்கின்றன வாகனங்கள்.
நரகமாக மாறிக் கொண்டிருக்கிறது
இன்றைக்கு சென்னையில் நிலவும் வாகன நெரிசலில் எப்படிப்பட்ட வண்டியாக இருந்தாலும் இரண்டாவது.. அதிகபட்சம் மூன்றாவது கியருக்கு மேல் ஓட்டவே முடியாது. இப்படி ஓட்டுவதால் வெளியாகும் கரியமில வாயு நாளொன்றுக்கு 66000 கிலோ.
மாற்றுப்பாதையில் செல்வதால் ஏற்படும் கூடுதல் தூரத்தைக் கடப்பதால் மட்டுமே இவ்வளவு புகை வெளியேறுகிறதென்றால்.. மொத்தமுள்ள 40 லட்சம் வாகனங்களும் வெளியேற்றும் புகையைக் கணக்கிலெடுத்தால்... சென்னை என்பது எத்தனை பெரிய நரகமாக மாறிக் கொண்டிருக்கிறதென்பது புரியும்.
'அப்படியே இந்த பூமி பிளந்து வாகனங்களை மட்டும் லபக்கிக் கொண்டால் எவ்ளோ நல்லா இருக்கும்.. பழையபடி ஜட்கா, மாட்டு வண்டியே மேல்!'
-இது கத்திப்பாரா மேம்பாலத்தில் சுட்டெரிக்கும் மத்தியான வெயிலில் ட்ராபிக் நெரிசலில் திணறிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளில் ஒருவர் வெறுத்துப் போய் சொன்னது!