'தட்ஸ்தமிழ்' பேஸ்புக் பதிவின் பலன்: மாயமான மனநோயாளி குடும்பத்தோடு சேர்த்து வைப்பு!
சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டு இடம் தெரியாமல், ஊரைவிட்டு சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் சுற்றித் திரிந்த நபர், 'ஒன்இந்தியா தமிழ்' பேஸ்புக் பதிவால் பத்திரமாக அவரது உறவினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி நகர பஸ் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சுற்றிதிரிவதாக கிடைத்த தகவலை, புகைப்படத்துடன் 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம் சார்பில், இரு தினங்கள் முன்பு அதன் பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருந்தோம்.
உடன்குடி நகர ஆம்ஆத்மி கட்சி நிர்வாகி குணசீலன் வேலன் என்பவரின் தொலைபேசி இணைப்பையும் அதில் கொடுத்திருந்தோம். 'ஒன்இந்தியா தமிழ்' பேஸ்புக்கை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். அதில் பலரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில், நமது சிங்கப்பூர்வாசகர் ஒருவர், தொடர்புகொண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனது உறவினர் என்று தெரிவித்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர் பெயர் கண்ணன், மதுரை, வண்டியூர் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி என்றும் தெரியவந்தது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாகத்தான் இந்தநிலைக்கு ஆளாகியுள்ளார் என்றும் அந்த உறவுக்காரர் கூறினார்.
அதன்பிறகு, தகவல், கண்ணனின் மனைவி, லட்சுமி மற்றும் உறவுக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும், உறவினர்கள்தானா என்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். களத்தில் இருந்து இந்த ஏற்பாடுகளை குணசீலன்வேலன் மேற்கொண்டுள்ளார்.