எங்க வாழ்க்கையே இருண்டு போச்சே... கதிராமங்கலம் முழுவதும் பறக்கும் கறுப்புக்கொடி
கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் ஓஎன்ஜிசி பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.
தஞ்சை: கும்பகோணம் கதிராமங்கலத்தில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் ஓஎன்ஜிசி பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கதிராமங்கலம் கிராம மக்கள் தற்பொழுது நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு-எண்ணெய் குழாய்களில் கசிவு ஏற்பட்டதே இதற்குக் காரணம்.
எண்ணெய் குழாய்களை சீரமைப்பதற்காகவும் புதிய குழாய்களை பதிப்பற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ள அதிநவீன ராட்சத இயந்திரங்களை கண்டு அச்சமடைந்த இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு
சமூக வலைத்தளங்களில் கதிராமங்கலம் மக்கள் படும் அவலத்தை பலரும் பதிவிட்டு வருகின்றனர். குடிக்க தண்ணீரின்றியும், சொற்ப தண்ணீரும் எண்ணெய் கலந்து கலங்கலாக வருவதால் கதிராமங்கலம் கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது.

நிலத்தடி நீர்
ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றின் காரணமாக கதிராமங்கலத்தின் நிலத்தடி நீர் முழுமையாகக் கெட்டுப் போய் உள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமல்ல ஒவ்வொரு குடிமக்களும் குடிநீருக்கு கூட தவிக்கின்றனர்.

குடிநீர் கூட இல்லையே
கதிர்வேய்ந்த மங்கலம் என்று பெருமையுடன் பேசப்பட்ட இன்றைய கதிராமங்கலம் கிராமத்தில் பல பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பட்டுப்போன வயல்கள்தான் காணப்படுகின்றன. குடிக்க கூட நீர் இல்லாத கிராமமாக மாறி வருகிறது.

கறுப்புக்கொடி
எண்ணெய் எடுப்பதற்காக நெல்விளையும் பூமியையும், தென்னைமரங்களையும் பட்டுப்போக வைப்பது நியாயமா எங்கள் வாழ்க்கையே இப்படி இருண்டு போச்சே என்று வீடுகள் தோறும் கறுப்புக்கொடி ஏற்றி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் கிராம மக்கள்.












Click it and Unblock the Notifications