தமிழகத்தை சுற்றி வளைக்கிறது ஓஎன்ஜிசி.. மேலும் 110 எண்ணெய்க்கிணறு அமைக்க திட்டம்!
தமிழகத்தில் மேலும் 110 எண்ணெய்க்கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மேலும் 110 எண்ணெய்க்கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஓஎன்ஜிசி அதிகாரிகள் டிஜிபியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறு அமைத்தது. இந்நிலையில் அந்த குழாய்களை அகற்றி பராமரிப்பு பணிகளை ஒஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதேநேரத்தில் ஓஎன்ஜிசி சார்பில் கதிராமங்கலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கான ஆய்வு தொடங்க இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து கடந்த மே 19 ஆம் தேதி அப்பகுதியில் திரண்ட கிராம மக்கள் புதிதாகக் குழாய் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.
ஓஎன்ஜிசி மறுப்பு
ஆனால் இதனை மறுத்த ஓஎன்ஜிசி நிறுவனம், மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமில்லை என கூறியது. வெறும் பராமரிப்பு பணிதான் நடைபெறுவதாக விளக்கமளித்தது.
புதிய 110 எண்ணெய்க்கிணறுகள்
இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் மேலும் 110 எண்ணெய் கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. எண்ணெக் கிணறுகளை அமைக்க கதிராமங்கலம், நெடுவாசல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே போராட்டம்
ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய்க்கிணறு பராமரிப்பு ஆகிய பணிகளுக்காக நெடுவாசல் கதிராமங்கலத்தில் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறு அமைத்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் ஆபத்துள்ளது.
விரைவில் எண்ணெய்க் கிணறுகள்
இதைத்தொடர்ந்து புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்க பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னையில் டிஜிபியுடன் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்மூலம் விரைவில் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் புதிய 110 எண்ணெய்க்கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.