வெங்காயத்தை கொள்ளை அடிக்கும் அவலம்... இனி லாக்கரில்தான் வைக்கணுமோ?
சென்னை: உரிக்கமலேயே கண்ணீரை வரவழைக்கிறது வெங்காயத்தின் விலை. சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கத்திற்கு இணையாக வெங்காயம் விலை உயர்ந்து வருவதால், திருடர்களின் குறி வெங்காயத்தின் பக்கம் திரும்பியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் வெங்காயத்தை இனி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
வரத்து குறைவு
சந்தைகளில் வெங்காய வரத்து குறைந்துள்ளதால், சமீபகாலமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் வீட்டு திடீரென பட்ஜெட் எகிறியுள்ளதாக இல்லத்தரசிகள் தெரிவித்துள்ளனர்.
வெங்காய சந்தை
ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய மார்க்கெட், மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் லசல்காவ் என்ற பகுதியில் உள்ளது. இந்த சந்தையில் வெங்காய விலை கிலோ 60 ரூபாயைத் தொட்டு உள்ளது. டெல்லி உள்பட வட மாநிலங்களில் சில்லரையாக கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை தரத்துக்கு தகுந்தவாறு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
700 கிலோ வெங்காயம்
இந்த நிலையில் மும்பை வடாலா பகுதியில் உள்ள பிரதிக்ஷா நகரில் வெங்காய கடை நடத்தி வரும் வியாபாரி ஆனந்த் நாயக் என்பரின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடைக்குள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 14 மூட்டை வெங்காயம் மாயமாகி இருந்தன. இந்த மூட்டைகளில் 700 கிலோ வெங்காயம் இருந்தது என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.
டெல்லியில் மலிவு விலை
டெல்லியில் பொதுமக்களின் நலனை கருதி வெங்காயம் மானிய விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் எஸ்எப்ஏசி மூலமாக, வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் 8,000 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மதர் டெய்ரி மற்றும் டெல்லியின் உள்ள பால் திட்ட பூத்களில் வெங்காயம் மானிய விலையில் விற்கப்படுகிறது.
டெல்லி அரசு விற்பனை
வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.40க்கு விற்பனையானது. 100 டெல்லி பால் திட்ட மையங்களில் கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்கப்படுகிறது. தொடர்ந்து வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையிலும், டெல்லி அரசு 280 இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.30க்கு விற்பனை செய்து வருகிறது.
ஆந்திராவில் ரூ.20
ஆந்திராவில் ஜூன் மாதம் கிலோ ரூ.23க்கு விற்கப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.70 முதல் 80க்கு விற்கப்படுகிறது. நாளுக்கு நாள் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதைடுத்து ஆந்திர அரசு சார்பில் மலிவு விலையில் வெங்காயம் விற்க ஏற்பாடு செய்து உள்ளது. அதாவது 1 கிலோ ரூ.20க்கு விற்பனை செய்கிறது.
ஏற்றுமதி விலை அதிகரிப்பு
உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அதன் ஏற்றுமதி விலையை உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 425 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுக்குள் வைக்கும் வகையில் ஏற்றுமதி விலையை 375 டாலர் உயர்த்தி, விலை டன்னுக்கு 700 அமெரிக்க டாலராக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.