மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் 6 மாதங்களில் இடைத்தேர்தல்: ஜி.கே.வாசன் ஆருடம்!
காஞ்சிபுரம்: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அடுத்த 6 மாதங்களில் இடைத் தேர்தல் வரும் என்று ஜி.கே.வாசன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம், லத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய ஊர்களின் தேர்தல் பிரசாரம் செய்து பேசும்போது, ''ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தில் நாங்கள் செய்த பணியை நாங்களே கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டு இருக்கின்றோம்.
5 முனை போட்டி
இன்றைக்கு தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. எங்களுடன் இஸ்லாமிய அமைப்புக்கள், கிருத்துவ அமைப்புக்கள் கூட்டணியில் இருக்கின்றார்கள்.
பாஜக உடன் கூட்டு
ஆனால், அ.தி.மு.க. மறைமுகமாக பா.ஜ.க.வினரோடு ஒட்டி உறவாடி வருகின்றனர். தி.மு.க. 5 ஆண்டுகள் மதவாத கட்சியின் கூட்டணியில் இருந்துவிட்டு இன்று காங்கிரஸ் கட்சிக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆம் ஆத்மி கட்சி?
ரஷ்யாவிலே மழை பெய்தால் இந்தியாவிலே கொடை பிடிக்கு கம்யூனிஸ்டுகளை பற்றி பேசவேண்டிய அவசியம் கிடையாது. இதற்கு இடையில் ஆம் ஆத்மி சர்க்கஸ் விலையாடிக் கொண்டிருக்கிறது. மோடி என்ற சொல் பொருளா...? பெயரா...? என்பது கூட ஆறு மாதத்திற்கு முன் வரை தமிழகத்தில் தெரியாது.
ராகுல்தான் பிரதமர்
இன்றைக்கும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் மோடியை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை
கேப்டன் இல்லாத கப்பல்
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பிரதமர் யார் என்று தெரியாமலே வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது, கேப்டன் இல்லாத கப்பலிலே பயணிப்பது போல் தான். அவர்கள் தேர்தலுக்கு பின் ஜெயிக்கின்ற கட்சியோடு பதவியை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
6 மாதங்களில் ஆட்சி
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் 6 மாதங்களில் இடைத் தேர்தல் வரும். நாடு தொடர்ந்து வளர்ச்சி பெறவும், மத்தியில் நிலையான ஆட்சி அமையவும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்" என்றார் ஜி.கே.வாசன்.