எடப்பாடி பழனிச்சாமி அரசுடன் இணக்கம்.... டெல்லி நடவடிக்கையால் ஓபிஎஸ் கோஷ்டி கடும் விரக்தி
எடப்பாடி பழனிச்சாமி அரசுடன் டெல்லி இணக்கமாக இருப்பதால் ஓபிஎஸ் கோஷ்டி கடும் விரக்தியில் இருக்கிறதாம்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கத்துடன் டெல்லி தொடர்ந்து இணக்கமாக இருப்பதால் ஓபிஎஸ் கோஷ்டி கடும் விரக்தியில் உள்ளதாம்.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் 18 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும்; அரசு ஒப்பந்தங்களில் நல்ல கமிஷன் வேண்டும். மாவட்டங்களில் நடக்கும் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் இந்த அதிருப்தி கோஷ்டியின் கோரிக்கை.
எடப்பாடி ஆட்சி கலைப்பு
இன்னொருபுறம் எடப்பாடி ஆட்சியை கலைத்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தோடு டெல்லியில் முகாமிட்டார் ஓபிஎஸ். இதற்காக பிரதமரை நேரில் சந்தித்தும் பேசினர் ஓபிஎஸ்.
ஒன்றாக இருங்க..
ஆனால் இரண்டு கோஷ்டியும் ஒன்றாக இருந்து கட்சியை வளர்க்கப் பாருங்கள். வேறு எந்தக் கோரிக்கையும் வைக்க வேண்டாம் என உறுதியாகக் கூறிவிட்டாராம் பிரதமர்.
பாஜக நிர்வாகிகளும்...
இதனால் பா.ஜ.கவின் அகில இந்திய நிர்வாகிகள் சிலரையும் அவர்கள் அணுகியுள்ளனர். அவர்களும்கூட இரு கோஷ்டியையும் அரவணைத்துச் செல்வதைத்தான் பிரதமர் விரும்புகிறார். ஆட்சி தொடர்வதில் எந்தச் சிக்கலும் இருக்கப் போவதில்லை. உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கூறிவிட்டனர்.
ஓபிஎஸ் கோஷ்டி விரக்தி
இதையடுத்து சசிகலா குடும்பத்துடன் எடப்பாடி பழனிசாமி அண்ட் கோ நடத்தும் ரகசிய வேலைகளைப் பற்றி ஆவணங்களுடன் பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதுவும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஓபிஎஸ் கோஷ்டி கடும் விரக்தியில் இருக்கிறதாம்.