ஓபிஎஸ் அணியினர் அவசர ஆலோசனை!
ஓபிஎஸ் அணியினர் அவசர ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரதமரை சந்தித்து வந்த நிலையில் ஓபிஎஸ் அணியினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பாஜகவுடனான கூட்டணி குறித்து அறவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் தமிழகத்தில் பாஜக யாருடைய கூட்டணியையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கவில்லை தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார். அதேபோல் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தமிழகத்தில் பாஜக தனித்து தனது பலத்தை நிரூபிக்கும் என்றார்.
உதாசினப்படுத்தப்படுகிறாரா ஓபிஎஸ்?
அதேநேரத்தில் ரஜினிகாந்தை வளைத்துப் போடுவதில் தான் பாஜக தலைவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். தமிழக பாஜக தலைவர்களின் செயல்பாடு ஓபிஎஸை உதாசினப்படுத்துவதுப் போல் இருந்தது.
எடப்பாடி மோடியுடன் சந்திப்பு
மேலும் பாஜக தலைமை தற்போது எடப்பாடி அணியுடன் நெருக்கம் காட்டுவது போல் தெரிகிறது. இன்று எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.
ஓபிஎஸ் அணி அவசர ஆலோசனை
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அந்த அணியினர் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் இரட்டை இலை முடக்கம், சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கட்சியை காப்பாற்றுவது, இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு?
இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கேபி முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். எடப்பாடி பிரதமரை சந்தித்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியின் இந்த அவசர ஆலோசனையால் முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.