ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒபிஎஸ் தரிசனம்- பசு, குதிரைக்கு பூஜை செய்த ஓபிஎஸ்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது குதிரையின் காலில் விழுந்து வணங்கினார்.
சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலையில் தனது குடும்பத்தினருடன் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு பசு, குதிரைக்கு சிறப்பு பூஜைகள் செய்த அவர் குதிரையின் காலில் விழுந்து வணங்கினார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இருவருமே நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றவும் இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
ஆண்டாள் கோவிலில் ஓபிஎஸ்
இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த கையோடு குடும்பத்துடன் விமானம் மூலம் மதுரைக்கு வந்தார் ஓ.பன்னீர் செல்வம். இன்று காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த ஓ.பன்னீர் செல்வம் அங்கு காலையில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்றார்.
பசு பூஜை
கோசாலையில் இருந்த பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் பங்பேற்று பசுக்களை தொட்டு வணங்கினார். இதனையடுத்து குதிரைக்கு நடைபெற்ற பூஜையிலும் பங்கேற்றார் ஒ.பன்னீர் செல்வம்.
குதிரையை கும்பிட்ட ஓபிஎஸ்
அலங்கரிக்கப்பட்ட குதிரையை தொட்டு வணங்கிய ஓ.பன்னீர் செல்வம், பின்னர் குதிரையின் காலில் விழுந்து வணங்கினார். இதனையடுத்து குடும்பத்துடன் தனது குல தெய்வ கோவிலான பேச்சியம்மனை வணங்கச் சென்றார் ஒ.பன்னீர் செல்வம்.
வெற்றிக்காக வழிபாடு
முதல்வராக இருந்த போதும் அமைச்சராக இருந்த போதும் ஓ. பன்னீர் செல்வம் தனது குல தெய்வ கோவிலுக்கு வந்து வணங்கி செல்வார். இப்போது அவர் எம்எல்ஏவாக மட்டுமே இருக்கிறார். ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பது தெரியவரும். இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களே உண்மையான அதிமுக என்பதையும் தொண்டர்கள் உணர்ந்து கொள்வார்கள். எனவே கட்சி, ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு வழிபாடுகள் செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.