"எழுத்து அறக்கட்டளை" - இலக்கிய அமைப்பை தொடங்கிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திடீரென "எழுத்து' என்ற தமிழ் இலக்கிய அமைப்பை உருவாக்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா நவம்பர் 3-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், 2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் நிதி, உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்கிற அளவுக்கும் விவாதிக்கப்பட்டவர்.
ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
தனி கோஷ்டி
அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை குறிவைத்தும் தமக்கான கோஷ்டியை வலுப்படுத்தியும் வந்தார் ப.சிதம்பரம்.
நேரு குடும்பம் மீது பாய்ச்சல்
இந்நிலையில் திடீரென ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சிதம்பரம், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என்று கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்து இலக்கிய அமைப்பு
இதனிடையே பொருளாதார வல்லுநராக அறியப்படும் ப.சிதம்பரம், எழுத்து என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா நவம்பர் 3-ந் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டை எம்.சிடி.எம். சிதம்பரம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நடைபெற உள்ளது.
நோக்கம் என்ன?
தமிழ் இலக்கியத் தளத்தில் புதுமைகளை மிளிரச் செய்யவும், தமிழ் இலக்கியம் மேன்மையுறத் தொண்டாற்றவும் "எழுத்து' என்ற இலக்கிய அமைப்பை தொடங்குவதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அறங்காவலர்கள் யார்?
செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்வை நடராசன், கவிஞர்கள் வைரமுத்து, மு.மேத்தா, மரபின் மைந்தன் முத்தையா, ப.சிதம்பரம் ஆகியோர் எழுத்து அமைப்பின் அறங்காவலர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நேரில் அழைப்பு
எழுத்து இயக்கத் தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை எழுத்தாளர்கள், நடிகர்கள், இலக்கிய ஆர்வமுள்ள நீதிபதிகள் என பலருக்கும் ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ரஜினிக்கும் அழைப்பிதழ்
கடந்த சனிக்கிழமை நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து "எழுத்து' அமைப்பின் தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை கார்த்தி சிதம்பரம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரபரப்பு
சுறுசுறு அரசியல்வாதியான ப.சிதம்பரம் திடீரென எழுத்து என்று இலக்கிய அமைப்பைத் தொடங்கியிருப்பது காங்கிரசார் மத்தியில் பல்வேறு யூகங்களை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.