பசுமை இல்லத்தில் பளிச்சிடும் "அம்மா".. கண்டுக்காமல் விட்ட "ஈசி"... புகார்களைத் தட்டும் கட்சிகள்!
நெல்லை: நெல்லை மாவட்ட பகுதிகளில் பசுமை வீடுகளில் முதல்வர் ஜெயலலிதா படம் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதால் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கு புகார்களை தட்டி விட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பல பகுதிகளில் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இவை ஓடுகளாக பதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்த நிலையில் அரசு திட்டங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள முதல்வர் படம், சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் போர்டுகள் போன்றவை அகற்றப்பட்டன. ஆனால் கிராமப்புறங்களில் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள பசுமை வீடுகளில் ஜெயலலிதா படம் அகற்றப்படவில்லை. இதனால் சத்திமில்லாமல் அதிமுகவுக்கு செய்யப்படும் விளம்பரமாக அமைந்துள்ளதாக பல்வேறுகட்சியினரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தோ்தல் நெருங்கும் நேரத்தில் ஆணைய அதிகாரிகள் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இனியாவது பசுமை வீடுகளில் உள்ள ஜெ படத்தை அகற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.