பாட்னா குண்டுவெடிப்பு குற்றவாளி தாரிக் மரணம்
சென்னை: பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் காயமுற்ற தீவிரவாதி அய்னுல் என்ற தாரிக் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசார கூட்டத்தை சீர்குலைக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியானார்கள். 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்தி இருப்பது தெரியவந்தது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இம்தியாஸ் அன்சாரி, தவ்சீம், தாரிக் அன்சாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 5 பேர் கைதாகியுள்ளனர் முக்கிய குற்றவாளி ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் குண்டு வெடிப்பில் காயமடைந்த குற்றவாளி அய்னுல் என்ற தாரிக் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். இதனால் இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டுவதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.