பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இழுத்தடிப்பு: தாசில்தாருக்கு ரூ.14,000 அபராதம் விதித்த கோர்ட்
நெல்லை: முறையான ஆவணங்கள் வழங்கியும் பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இழுத்தடித்த தாசில்தாருக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை சந்திப்பு சிஎன் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப். இவர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி முன்னீர்பள்ளம் கிராமத்தில் நிலம் வாங்கினார். இதனை மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தார். தான் வாங்கிய நிலத்தின் பட்டாவை பெயர் மாற்றம் செய்ய வேண்டி ரூ.5க்கான நீதிமன்ற ஸ்டாம்ப் ஒட்டி மனுவை பத்திர பதிவு அலுவலகத்தில் சமர்பித்தார்.

இதை தொடர்ந்து பட்டா பெயர் மாற்றத்திற்கான ஆவணம் பாளையங்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதை பெற்ற வருவாய் துறையினரிடம் இருந்து பதிவும் பெற்றார். இந்நிலையில் பெயர் மாற்றம் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜோசப் பாளையங்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் கேட்டும் முறையான பதில் இல்லை. இதையடுத்து அவர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நீதபதி கிள்ளிவளவன், உறுப்பினர் ராணி ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் குறித்த மனுவை பெற்றுக் கொண்டு சேவை குறைபாடு காரணமாக மனுதாரருக்கு உரிய நேரத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்து தராதது தெரிய வந்தது.
இதையடுதது மனுதாரருக்கு இரண்டு வாரத்தில் பெயர் மாற்றம் செய்து தர வேண்டும். அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.4 ஆயிரமும் என மொத்தம் ரூ. 14 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications