என்ன ஆச்சு திமுகவுக்கு? 2ஜி வழக்கு தீர்ப்பும், கை கொடுக்கவில்லையே!
Recommended Video
சென்னை: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கிலிருந்து திமுகவை சேர்ந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட தகவல் வெளியானபோது நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கூட மக்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை அக்கட்சி பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆர்.கே.நகரில் முதல் சுற்று முதலே தினகரன் முதலிடத்திலும், அதிமுக 2வது இடத்திலும் தொடர்கிறார்கள். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் மருது கணேஷ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இத்தனைக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற்ற தினம் காலையில்தான் 2ஜி ஊழல் வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், தீர்ப்பு வெளியானது.
களங்கம் விலகியது
திமுக மீதான களங்கம் விலகிவிட்டது. இனி எல்லாமே வெற்றிதான் என கூறிவந்தனர் திமுக தலைவர்கள். ஆனால், ஆர்.கே.நகரில் அதிமுகவின் வாக்குகள் தினகரன் மற்றும், மதுசூதனன் ஆகியோரிடையே பங்கிடப்பட்டுள்ள நிலையிலும், திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திமுக பரிசீலனை
2ஜி ஊழல் வழக்கு மட்டுமே திமுகவிடம், மக்களுக்கு இருக்கும் அதிருப்திக்கான காரணம் இல்லை. அதையும் தாண்டி இன்னும் நிறைய உள்ளது என்பதாக இதை எடுத்துக்கொள்ளலாம். அல்லது 2ஜி பற்றி மக்கள் மறந்திருந்தார்கள். அதைப்பற்றி கவலையேபடவில்லை. திமுகவின் பிற செயல்பாடுகள்தான் இதற்கு காரணம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
2ஜி வெற்றி பலனளிக்கவில்லை
இதில் எந்த காரணமாக இருந்தாலும், அது திமுக பரிசீலனை செய்ய வேண்டியதில் முக்கியமான காரணங்களாகும். ஏனெனில், 2ஜி வழகில் பெற்ற வெற்றி அரசியலில் தங்களுக்கு பெரும் மதிப்பை பெற்றுத் தந்துவிடும் என நினைத்துதான், பெரிய கொண்டாட்டங்களில் இறங்கியது திமுக. ஆனால், அந்த யுக்தி இனி வரும் தேர்தல்களில் பலனளிக்காது என்பதை அறிய இத்தேர்தல் நாடித்துடிப்பாக பார்க்கப்படலாம்.
வாக்குகள் பிரிந்தன
கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என தொடர்ந்து திமுக தோல்வியடைந்து வருவது அக்கட்சி தொண்டர்களை சோர்வுக்குள்ளாக்கும் என்பதை திமுக கவலையோடு பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி, இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அதிமுகவின் வாக்குகள் தினகரன் மற்றும் மதுசூதனனால் பிரிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதுதான் அது.