எங்களுக்கு இவர்கள் வேண்டாம்... ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸை நிராகரித்த ஆர்.கே.நகர்!
ஓபிஎஸ் - ஈபிஎஸ்-சை அதிமுக வாரிசுகளாக ஏற்க அதிமுகவினர் மறுத்து விட்டதையே ஆர்.கே.நகரில் அதிமுகவின் பின்னடைவு வெளிப்படுத்துகிறது.
Recommended Video

சென்னை: நாட்டின் சக்திவாய்ந்த கட்சியாக கொடிகட்டிப் பறந்த அதிமுகவை தற்போது அடிமட்ட தொண்டர்கள் கூட ஏற்க மறுத்துள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை அவர்கள் அதிமுகவின் தலைமையாக ஏற்க மறுத்து விட்டதையே ஆர்.கே.நகர் காட்டுகிறது.
சோதனைகளை வென்று சாதனைகளை படைத்த கட்சி என்ற பெருமையை பெற்றது அதிமுக. திமுகவிலிருந்து எம்ஜிஆரின் வெளியேற்றம் என்ற பரபரப்பில் பிறந்த இந்த கட்சியை, பல துரோகங்களை சமாளித்து வளர்த்தார் எம்ஜிஆர். எம்ஜிஆரின் நம்பிக்கை நட்சித்தரமாக வளர்ந்து வந்த ஜெயலலிதாவிடம் அதிமுக தொண்டர்கள் கட்சியை ஒப்படைத்த நிலையிலிருந்து, இந்த கட்சிக்காக அயராது உழைத்தார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் சந்தித்தைப் போல பல துரோகங்களையும், சோதனைகளையும் சந்தித்த ஜெயலலிதா அதிமுகவை பல நேரங்களில் ஒரு ராணுவ தளபதி போல சிறந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்த கட்டுக்கோப்பான ஒழுங்குமுறை கட்சியில் பல சாதனைகளை நிகழ்த்த வைத்தது. அடிமட்ட தொண்டர்களிலிருந்து மூத்த நிர்வாகிகள் வரை அனைவருக்கும் ஒரே தலைமை ஜெயலலிதா என்ற நிலை இருந்ததால், அக்கட்சிக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

உடைந்துப்போன அதிமுக
ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமே மக்களிடத்தில் அதிமுக மீது ஒரு விதமான வெறுப்பை உண்டு செய்தது. தாங்கள் நேசித்த தலைவரின் மரணம் குறித்து ஒட்டுமொத்த அதிமுக கட்சி நிர்வாகிகளும் நாடகமாடுவதாக மக்கள் நம்ப ஆரம்பித்தனர். இந்த நிலை கட்சி தலைவர்களிடையே கருத்து வேற்றுமையை உண்டு செய்து, பல அணிகளாக அதிமுக உடைந்து போனது.

ஏறி ஏணியும் எட்டி உதைப்பு
அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி, தீபா அணி, தினகரன் அணி, ஸ்லீப்பர் செல்கள் என பல அணிகள் அதிமுகவில் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் புகார் கணைகளை தொடுத்துக்கொண்டனர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் வலுத்தது. ஜெயலலிதாவில் அடையாளம் காணப்பட்ட ஓபிஎஸ்சும், சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட ஈபிஎஸ்சும் ஏறி வந்த ஏணிகளை ஒவ்வொரு கால கட்டத்தில் எட்டி உதைத்தனர்.

ஓரே அணியான ஓபிஎஸ் - ஈபிஎஸ்
இரும்பு அரணாக தமிழகத்தை தன் ஆட்சி காலத்தில் பாதுகாத்து வந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழக நிர்கதியானது. தலைமை செயலகம் வரை மத்திய அரசு ரெய்டுகளை நடத்தின. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் பாஜகவை சரணடைந்து, இரு அணிகளையும் கலைத்து விட்டு ஓரே அணியை உருவாக்கினர். கட்சியையும் ஆட்சியையும் பங்கும் போட்டுக்கொண்டனர்.

எரிச்சலுக்கு காரணமான விழாக்கள்
தமிழகத்தில் பல அசாதாரண சூழ்நிலைகள் நிலவியபோதும், இயற்கை சீற்றத்தால் மக்கள் அவதிக்குள்ளான போதும் அரசு விழாக்களில் அதிமுக அரசு கவனம் செலுத்தியது மக்களிடையே எரிச்சலை உண்டு செய்தது. பாஜகவின் பினாமி அரசாகவே அதிமுகவை அனைத்து தரப்பினரும் கேலி செய்ய தொடங்கியதும், அதிமுகவின் தன்மானத் தொண்டனுக்கு அது தொண்டையில் ஈட்டி குத்தியதைப் போலவே வலித்தது.

தினகரனின் அதிரடி அரசியல்
தினகரனை போல அதிரடி அரசியலை செய்ய தவறிய ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் தங்களின் சுயலாபத்திற்காக செயல்படுவதாகவே மக்கள் ஒரு கட்டத்தில் நம்ப ஆரம்பித்தனர். அதிரடிக்கும், புகழுக்கும் பெயர் போன அதிமுக தற்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதற்கு ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் தான் காரணம் என்று நினைத்த மக்கள் அவர்களை அதிமுகவின் வாரிசுகளாக ஏற்க மறுத்துவிட்டதையே இந்த தேர்தலில் அதிமுகவின் பின்னடைவு வெளிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications