பணத்துக்காக 7 நாளாக அலையும் மக்கள் .... கையில் காசிருக்கு... ஆனா செலவு பண்ண முடியலையே!
சம்பளம் பணம் எடுத்த உடன் 500 ரூபாய் நோட்டுக்களாக செலவு செய்த மக்கள், மோடி செய்த பணத்தடையால் 7வது நாளாக 100 ரூபாய் சில்லறைக்காக வீதி வீதியா அலைந்து வருகின்றனர்.
சென்னை: வாரவிடுமுறை என்றாலே அதை மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள், கைவசம் இருந்த பணத்தை மாற்றவும், டெபாசிட் செய்த பணத்தை ஏடிஎம்களில் எடுக்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்ப வேண்டிய நிலையிலும் இன்றும் பலர் வங்கிகள், தபால் நிலையங்கள், ஏடிஎம்களில் காத்திருக்கின்றனர்.
பெரும்பாலான ஏடிஎம்கள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால் கடந்த 5 தினங்களாக பணத்தை எப்படி எடுப்பது என்று யோசித்து வருகின்றனர். நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு தொடங்கி நவம்பர் 14 இன்று வரை 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், 100, 50 ரூபாய் சில்லறை நோட்டுக்களை மாற்றவும் தவித்து வருகின்றனர்.
ஞாயிறன்று இரவு பகல் நேரங்களில் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாதவர்கள் நள்ளிரவுக்கு மேல் ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்துச் சென்றனர். அனைத்துமே ஆன்லைனின் வாங்கிய மக்கள் சில்லறை பணத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்க நேரிட்டது என்பதே சோகம்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்கள் வங்கி, மற்றும் ஏடிஎம் வாசலில் தவித்து வருகின்றனர். பணம் எடுக்க கட்டுப்பாடுகள் இருப்பதால் அன்றாட தேவைகளுக்காகவும், ரூ.100 நோட்டுகளுக்காகவும் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பணம் எடுத்துச் சென்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வராத சூழலும் நிலவி வருகிறது. இதனால் மக்கள் நள்ளிரவு நேரங்களில் பணம் எடுத்து வருகின்றனர்.
டெபாசிட் செய்யும் மக்கள்
500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 10-ம் தேதி முதல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், டெபாசிட் செய்யவும் 5வது நாளாக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மைசூரில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ.2000 கோடி பணம் கன்டெய்னரில் வந்தது. இதில் புதிய ரூ.500 கட்டுக்கள் இன்று பயன்பாட்டுக்கு வரும் என்ற பட்சத்தில் மக்களின் 6 நாள் இன்னல்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணத்தட்டுபாடு
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் புதிய 2 ஆயிரம், 100, 50 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. புதிய 500 ரூபாய் நோட்டுகள் இதுவரை புழக்கத்துக்கு வரவில்லை. இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணத்தட்டுபாடு மக்களின் வாங்கும் சக்தியை முடக்கிப் போட்டுள்ளது.
ஏடிஎம்களில் காத்திருப்பு
ஏடிஎம்களில் புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கான வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே, 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும். இதனால் மிகக் குறைந்த அளவே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருப்பு வைக்க முடிகிறது என்பதால் மக்கள் 2 முதல் 4 மணி நேரம் வரை மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
சென்னைவாசிகள் தவிப்பு
தென் சென்னையில் ஆங்காங்கே ஒருசில ஏடிஎம்களில் செயல்படுகிறது. வட சென்னையில் கொடுங்கையூர், மூலக்கடை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, எம்கேபிநகர், வேப்பேரி, டவுட்டன் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் வங்கிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அஞ்சல் நிலையங்கள் பண பரிமாற்றம் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் கூட்டம் இன்றும் காணப்படுகிறது. வங்கிகளைப் போல அஞ்சலகங்களும் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முடங்கிய இயல்பு வாழ்க்கை
ரூபாய் நோட்டுகள் தட்டுப் பாடு காரணமாக சென்னை மாநகரில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், நெசவாளர்களுக்கும், நூறுநாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் கூலி கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கூலி வாங்க முடியாத நிலையில் அன்றாட செலவுக்கு என்ன செய்வது என்று யோசித்து வருகின்றனர் அடித்தட்டு மக்கள்.