கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை: கோவையில் உள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் அங்கிருந்த கார் ஒன்று சேதமடைந்தது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் சிலர் இன்று காலை 6 மணிக்கு பெட்ரோல் வெடிகுண்டை வீசினர்.
அப்போது அங்கிருந்த கார் ஒன்று சேதமடைந்தது. அப்போது அலுவலகத்தில் தொண்டர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அலுவலக காப்பாளர் நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய விஷமிகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி சமீபத்தில் தாக்கப்பட்டார். இந்த நிலையில் கோவையில் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.