ஓ மை காட்.. ரெய்டெல்லாம் ஒரு பக்கம் பாஸூ.. பெட்ரோல் விலை ரூ.72 ஐ தாண்டிடுச்சு கவனிச்சீங்களா?
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்த வண்ணமே உள்ளன. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 72.40 காசுகளை எட்டிவிட்டது.
சென்னை : தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் சசிகலா குடும்ப ரெய்டு செய்தியை பார்த்துக் கொண்டிருக்கும் நம் குடும்பத்திற்கான கெட்ட செய்தி என்ன தெரியுமா.. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 72.40 காசுகளை தொட்டுவிட்டது என்பது தான்.
கடந்த ஜூன் மாதம் முதல் தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதற்கு முன்னர் இருந்த மாதம் இரண்டு முறை பெட்ரோல் விலை மாற்றத்திற்குப் பதிலாக இந்த முறை கொண்டு வரப்பட்டது.
மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் போது கூட இவற்றின் விலை இந்த அளவிற்கு உயரவில்லை. ஆனால் மக்களுக்கு எண்ணெய் விலை அடிப்படையில் விலை குறையும் போது உடனடியாக அவர்கள் லாபம் பெறுவதற்காக தினசரி அடிப்படையில் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
குறையவே இல்லை
ஆனால் தினசரி விலை நிர்ணயம் வந்ததில் இருந்து பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகத்தில் தான் இருக்கிறதே தவிர இறங்கிய பாடே இல்லை. ஜுன் மாதத்தில் ரூ. 68 ஆக இருந்த பெட்ரோல் விலை அந்த மாதத்தில் மட்டுமே 3 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆனால் அதற்கு பின்னர் ஜூலை மாதம் முதல் தொடர்ந்து ஏறுமுகம் தான்.
கலால் வரி குறைப்பால் ரூ.2 குறைந்தது
ஸ்லோ பாய்சன் போல ஏறிய பெட்ரோல் விலை செப்டம்பர் மாதத்தில் பெட்ரோல் விலை ரூ. 73 வரை உயர்ந்ததால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் அக்டோபர் மாத ரூ. 2 வரை குறைந்து பெட்ரோல் விலை ரூ. 71 என்ற ரீதியில் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட்டில் தான் ஏறிச் செல்கிறது.
அரசின் கையில் தான்
சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 72.40 காசுகளுக்கும், டீசல் ரூ. 61.41 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கலால் வரியை குறைத்த போதே மத்திய அரசு தாங்கள் வரியை குறைத்துவிட்டதாகவும், இனி மாநிலங்கள் தான் வரியை குறைக்க வேண்டும் என்று கூறிவிட்டது. ஆனால் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதை குறித்து எந்த சிக்னலையும் காட்டவில்லை.
விலைவாசியிலும் பாதிக்கும்
இதனால் மீண்டும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. கலால் வரி குறைத்துமே பெட்ரோல் விலை மீண்டும் விர் என ஏறி வருவது விலைவாசி உயர்விலும் பிரதிபலிக்கும் என்பதே சாமானிய மக்களின் கவலையாக உள்ளது.