போன் செய்து ஆபாச பேச்சு... பாரதியார் பல்கலை பேராசிரியர் மீது மற்றொரு பி.எச்.டி மாணவி புகார்
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது மேலும் ஒரு பி.எச்.டி மாணவி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் புகாரில் பேராசிரியர்கள் இரவில் போன் செய்து ஆபாசமாகப் பேசுவதாகவும், படிப்பு நிறைவுச் சான்றிதழை வழங்க பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அம்மாணவி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் மீது, முன்பு அனிதா என்ற ஆராய்ச்சி படிப்பு மாணவி கோவை மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார். அதில், தனது பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்புக்கு தடை ஏற்படுத்துவதாகவும், ஒருநாள் தன்னுடன் தங்க வேண்டும் என்று துறை தலைவரான பேராசிரியர் வற்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அனிதாவின் இந்தப் புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த எல்சமாசெபாஸ்டின் (வயது52) என்ற மற்றொரு பி.எச்.டி. மாணவி புகார் தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் எல்சமா இந்தப் புகாரை அளித்துள்ளார்.
தனது புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஆங்கில துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி படிப்புக்காக சேர்ந்தேன். முறையாக அனைத்து படிப்புகளையும் நிறைவு செய்தேன். 7 ஆண்டு படிப்பு முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி பட்டம் பெறுவதற்கான செமினார் நடைபெற்றது.
இதற்காக கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் உள்பட பார்வையாளர்கள் அனை வருக்கும் முறைப்படி அழைப்பு விடுத்து இருந்தேன். இந்தநிலையில் கண்காணிப்பாளரும், பேராசிரியருமான அவர், தான் செமினாருக்கு வரவேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும், இந்த பணத் தில் துறைத்தலைவர், மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டியது உள்ளது என்றும் கூறி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் புகார் செய்தேன். இதையடுத்து எனது செமினாருக்காக வேறு கண்காணிப்பாளரை நியமித்தனர். அவர் முன்னிலையில் நான் செமினார் நடத்தினேன். அதன்பின்னர் நான் சிறப்பாக செய்ததாக பாராட்டியதுடன், தேர்ச்சி பெற்றதாக சான்றி தழ் அளித்தனர். அதன்பின்னர் தகுதி சான்றிதழுக்காக காத்திருந்தேன். ஆனால் அது எனக்கு வர வில்லை.
இது குறித்து துறை அதிகாரிகளிடம் அணுகியபோது, அவர்கள் என்னிடம், ‘நான் செமினாரில் சரியாக செயல்படவில்லை என்றும் மீண்டும் தேர்வு நடத்த உள்ளதாகவும்' கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நான் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது குறித்து கேட்ட போது பேராசிரியர்கள் மழுப்பினர்.
எனக்கு முதலில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, ‘பல்கலைக்கழகத்தில் நான் சொல்லாமல் பட்டம் வழங்க மாட்டார்கள் என்றும், தான் கூறியபடி ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தான் சொல்லும் இடத்துக்கு தனியாக வரவேண்டும்' என்றும் கூறினார்.
ஒரு பெண் என்று பார்க்காமல் இரவு நேரத்தில் போன் செய்து ஆபாசமாக பேச தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசிய வார்த்தைகளை சொல்லவே எனக்கு வெட்கமாக உள்ளது. அந்த அளவுக்கு என்னை தொல்லை செய்தார். ஆராய்ச்சி பட்டப்படிப்பை நிறைவு செய்ய அவர்கள் கூறியபடி நடக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார்.
இதற்கு துறை தலைவர் உள்பட சிலர் ஆதரவாக இருந்தனர். எனவே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது ஆராய்ச்சிபடிப்பு சான்றிதழை பெற்று தருமாறு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன்' என எல்சமா செபாஸ்டின் கூறினார்.
எல்சமாவின் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து விசாரிக்க கல்விதுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பெண்கள் தொடர்பான புகார்களில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.