அரசியல் அவதாரம் எடுக்கிறது அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் - ஆம் ஆத்மியுடன் பேச முடிவு
இடிந்தகரை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை அரசியல் தளத்துக்குக் கொண்டு போவோம் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியுடன் தங்களது இயக்கத்தின் நிபந்தனைகள் குறித்துப் பேசவும் அது தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை...
தென்தமிழக மக்களும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் சேர்ந்து நடத்திவரும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை அரசியல் தளத்துக்கு நகர்த்துவது என்று இடிந்தகரையில் இன்று (நேற்று) நடந்த சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரம் மற்றும் உள்ளூர் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் இடிந்தகரையில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
சுமார் 200க்கும் அதிகமான தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் தங்கள் ஊர் மக்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர். அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை அரசியல் தளத்துக்கு நகர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
சமுதாயத் தலைவர்களின் ஒப்புதலின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியுடன் எமது நிபந்தனைகள் குறித்துப் பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பல்வேறு ஊர்களிலிருந்து சேவியர் வாஸ், அரிமாவளவன், அகஸ்டின், ஜோசப், பெர்னார்டு, சுபாஷ் பெர்னாண்டோ, கணேசன், ராஜலிங்கம், ல்க்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவைச் சார்ந்த உதயகுமார், புஷ்பராயன், மை.பா. நன்மாறன், ஜெயக்குமார், கிளாரட், முகிலன் போன்றோரும் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் இந்த முடிவு, புதிய அரசியல் சக்தியாக அது மாறப் போவதன் முதல் கட்டமாக கருதப்படுகிறது. ஆம் ஆத்மியுடன் இணைந்து இந்த அமைப்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலி்ல தென் மாவட்டங்களில், கடலோர மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.