பாமக மாவட்ட செயலாளர் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு: வேல்முருகன் உள்பட 55 பேர் மீது வழக்கு
நெய்வேலி: நெய்வேலியில் பாமக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 55 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(42). சனிக்கிழமை மாலை அவர் தனது ஆதரவாளர்களுடன் காடாம்புலியூருக்கு 2 கார்களில் சென்றுள்ளார்.
காடாம்புலியூரில் இருந்து அவர் நெய்வேலிக்கு கிளம்பினார். அவரின் கார்கள் சென்னை-கும்பகோணம் சாலையில் இந்திரா நகரில் தனியார் அரிசி ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது 3 கார்களில் வந்த மர்ம நபர்கள் அவரின் வாகனங்களை வழிமறித்தனர்.
அந்த மர்ம நபர்கள் ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் ஆறுமுகம், அவரது ஆதரவாளர்களான புதுச்சத்திரத்தைச் சேர்ந்த ரா.சக்திவேல் (43), ஈச்சங்காடு சிவராமன் மகன் சிவப்பிரகாசம் (19), நெய்வேலி ராஜேஷ் (33), சமட்டிக்குப்பம் அப்பு என்ற சிவகண்டன் (23), இளவரசன், செந்தில்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்களை தாக்கியது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் ஆட்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வேல்முருகன், அவரது அண்ணன் திருமால்வளவன், ரவி, கண்ணன், பாலமுருகன் மணிகண்டன் உள்பட 50 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் பிறகு திருமால் வளவன், வேல்முருகன் கட்சியின் கடலூர் நகர செயலாளர் ஆனந்து, மாநில மாணவர் அணி துணை செயலாளர் அருள்பாபு, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முருகன், வட்ட செயலாளர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
கொலை முயற்சி வழக்கில் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வேல்முருன் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, முத்தாண்டிகுப்பம், புலியூர் காட்டுசாகை, சம்மட்டிக்குப்பத்தில் பதட்டமாக உள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.