லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடனும் பாமக கூட்டணி இல்லை- தனித்தே போட்டி: அன்புமணி
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் கலந்துவிட்டு இன்று சென்னை திரும்பினார் அன்புமணி ராமதாஸ்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியாவில் இருந்து பசுமை தாயகம் சார்பில் கலந்து கொண்டு பேசினேன். இலங்கை பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புலம் பெயர்ந்த தமிழர்களும் இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். இந்தியா அழுத்தம் தராவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளால் நம் நாட்டுக்கு பாதகம் ஏற்படும். தமிழக முதல்வர் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டி பிரதமரை சந்தித்து அழுத்தம் தந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் வழங்கக் கூடாது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கவும், படகுகளை மீட்கவும் போராட்டம் நடத்துவோம்.
வருகிற லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. பாரதிய ஜனதா உட்பட எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றார்.