சேலத்தை வென்றது தேமுதிக.. அன்புமணிக்கு அருள் பாலித்த பாமக அருளை திராட்டில் விட்டது!
சென்னை: பாமக தனது கெளரவப் பிரச்சினை போல பார்த்த சேலம் தொகுதியை கடைசியில் தேமுதிக கொத்திக் கொண்டு போய் விட்டது. அதை பாமகவும் விட்டுக் கொடுத்து விட்டது.
பாஜக கூட்டணியில் சேலம் தொகுதி தொடர்பாக தேமுதிக, பாமக இடையே கடும் சண்டை மூண்டு விட்டது. இதனால்தான் கூட்டணியை இறுதிப்படுத்த முடியாமல், தொகுதிப் பங்கீட்டையும் நிறைவு செய்ய முடியாமல் பாஜக தவித்தது.
இந்த நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே கடைசி நேர சமரச முயற்சி நடந்தது. அதில் பாமகவை, பாஜக சமாதானப்படுத்தி விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை வந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பாஜக கூட்டணியை அறிவித்து யார் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதையும் தெரிவித்தார்.
அதன்படி சேலம் தொகுதி தற்போது தேமுதிகவிடமே தரப்பட்டு விட்டது. பாமகவுக்கு சேலம் கிடைக்கவில்லை. இதனால் அங்கு பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இத்தனைக்கும் தர்மபுரி கூட்டத்தின்போது அருளை மேடைக்கு அழைத்த டாக்டர் ராமதாஸ், அருள் நீதான் பாமக வேட்பாளர், சேலத்துக்கு., உன் பணிகளைத் தொடர்ந்து செய் என்றும் உற்சாகமூட்டி பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல அருளும் சேலம் திரும்பி பணிகளைத் தொடர்ந்தார். அதேசமயம், தனக்கு சேலம் தொகுதி கிடைக்காவிட்டால், சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என்றும் அவர் மிரட்டியிருந்தார்.
தற்போது சேலம் கைவிட்டுப் போய் விட்டதால் அருள் போட்டியிலிருந்து விலகுவாரா அல்லது சுயேச்சையாக போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தனது மகன் அன்புமணி ராமதாஸுக்கு தர்மபுரியை சண்டை போட்டு வாங்கி விட்ட டாக்டர் ராமதாஸ், அருளை மட்டும் சேலத்தில் கைவிட்டது சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.