நாம் ஏன் தோற்றுக் கொண்டே இருக்கிறோம்.. பாமகவினருக்கு ராமதாஸ் கேள்வி!
சென்னை: பாமக தற்போது வெள்ளி விழாவைக் கொண்டாடி வருகிறது. ஆனால் சென்னை மாநகராட்சித் தேர்தலில் நாம் தனித்து நின்று வெற்றி பெற முடியவில்லை. இதை நமது கட்சியினர்தான் விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கோயம்பேட்டில் இன்று நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சிலிருந்து...
வெள்ளி விழா ஆண்டு
பா.ம.க.வின் வெள்ளி விழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறோம். ஆனால் இதுவரை சென்னையில் தனித்து நின்று மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையே ஏன்? அதற்கான காரணத்தை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
உங்க மனைவி, குடும்பத்துக்குத் தெரியுமா...
மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த போராட்டங்களின் நன்மைகளும் உங்கள் வீடுகளில் உள்ள மனைவி, குழந்தைகளுக்கு தெரியுமா?
அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்
முதலில் அவர்களுக்கு இந்த நன்மைகளை சொல்லி கொடுங்கள் அடுத்த கூட்டங்களுக்கு வரும் போது குடும்பத்தோடு வாருங்கள் என்றார் அவர்.
தீர்மானங்கள்
பின்னர் கூட்டத்தில் பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்...
வீட்டுக்குத் தலா 20 லிட்டர் இலவச குடிநீர்
சென்னையில் தினமும் ஒவ்வொரு வீட்டுக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
மவுலிவாக்கம் கட்டட விபத்து
மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழக குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.
மது வேண்டுமா.. வேண்டாமா
பா.ம.க. மகளிர் அமைப்பு சார்பில் மது வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியோடு வீடு வீடாகச் சென்று கையெழுத்து வாங்குவது. பின்னர் அந்த கையெழுத்து பிரதிகளை ஜனாதிபதியிடம் கொடுப்பது.
தொகுதிக்கு 75,000 புதிய உறுப்பினர்கள்
சென்னையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 75 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் ஒரு மாதம் நடத்துவது.
வாக்குச் சீட்டு முறையைக் கோரி
தேர்தலில் வாக்கு சீட்டு முறையை அமுல்படுத்த வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பது என்று தீர்மானங்களில் கூறப்பட்டிருந்தது.